புதுதில்லி:
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட பயனாளிகளுக்கு கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் வாயிலாக பயன்பெறும் சுமார் 79.88 கோடி பயனாளிகளுக்கு, மே, ஜூன் ஆகிய இரண்டு மாத காலத்திற்கு, நபருக்கு மாதம் ஒன்றுக்கு ஐந்து கிலோ வீதம், உணவு தானியங்களை அளிப்பதற்காக, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் கீழ் கூடுதல் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும்
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தற்போதைய ஒதுக்கீட்டு விகிதத்தின் அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியான, கோதுமை/அரிசி ஒதுக்கீட்டு அளவை மத்திய உணவு பொது விநியோகத்துறை தீர்மானிக்கும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், உள்ளூர் பொது முடக்க சூழல்கள், மோசமான வானிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பிரதமர் கரீப்கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை அனுப்பும்/ விநியோகிக்கும் கால அளவை நீட்டிப்பது குறித்தும் இந்தத் துறை முடிவெடுக்கும். ஒதுக்கப்பட உள்ள உணவு தானியங்களின் உத்தேச அளவு 80 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.