india

img

எனக்கும் இந்தி தெரியாது - உயர்நீதிமன்ற நீதிபதி

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான தகவல்களை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம்,  அவருக்கு அளித்த பதில்கள் இந்தியில் இருந்துள்ளன.

இந்நிலையில், இந்தியில் பதில் அனுப்பப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ஞானசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கு இந்த மொழி தெரியாது என்றும், தனக்குத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியில் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், தனக்குத் தெரிந்த மொழியில் மட்டுமே பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு ஆவணங்களை பார்த்த நீதிபதி வைத்தியநாதன், தனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்தார். இது குறித்து, மத்திய அரசு வருகிற 16 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

;