india

img

டிச.8 பாரத் பந்த்தை வெற்றிகரமாக்கிடுக.... அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல்.... இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு....

புதுதில்லி;
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் அறைகூவலான டிசம்பர் 8 பாரத் பந்த்தை மகத்தான முறையில் வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் அகில இந்திய தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லாஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுக்க மறுக்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசாங்கத்தின் அடாவடித்தனமான நிலைப்பாட்டைக் கண்டித்து, அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, ராஷ்ட்ரிய கிசான் மகா சங்கம், பாரதிய கிசான்யூனியன் குழுக்கள் மற்றும் பஞ்சாப்கிசான் சங்கங்கள் ஒருங்கிணைந்த ‘தில்லி செல்வோம்-சம்யுக்த கிசான்மோர்ச்சா’ அமைப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கும் விதத்தில் டிசம்பர் 8 அன்று ‘மக்கள் ஊரடங்கு/பாரத் பந்த்‘ அனுசரிக்குமாறு அறைகூவல் விடுத்துள்ளது.

கார்ப்பரேட்களுக்கு ஆதரவான வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்ய வேண்டும் என்றும்,மின்சார திருத்தச் சட்டமுன்வடிவு-2020 ஐ திரும்பப் பெற வேண்டும் என்றும் ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ ஒருமனதாக வலியுறுத்துகிறது.தொழிலாளர்கள், வர்த்தகர்கள், சிறு உற்பத்தியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவு மக்களும் தங்கள் ஒருமைப்பாட்டை விரிவாக்கி, தோளோடு தோள்கொடுத்து, டிசம்பர் 8 அன்று ‘மக்கள் ஊரடங்கு/பாரத் பந்த்‘ மகத்தான முறையில் வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்றும் அதனை வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக மாற்ற வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் விதத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் தாங்களாகவே முன்வந்து தங்கள் வாகனங்களை சாலைகளில் ஓட்டாமல் இருந்திட வேண்டும் என்றும், கடைகள் போன்றவற்றைத் திறக்காமல் இருந்திட வேண்டும் என்றும், உண்மையில் இது மக்கள் ஊரடங்கு என்று காட்டிட வேண்டும் என்றும் அனைத்துப் பிரிவு மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.மக்கள் ஊரடங்கின் ஓர் அங்கமாக, விவசாயிகள் சங்கங்களின் முன்னணி ஊழியர்கள் அன்றைய தினம் சாலை மறியல், ரயில் மறியல்போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவார்கள்.விவசாயிகள் டிசம்பர் 5 அன்று நாடுமுழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் நரேந்திர மோடி அரசாங்கம்மற்றும் கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகள் அம்பானி, அதானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரிக்கிறார்கள். டிசம்பர் 5 அன்று நடைபெறும் அனைத்து சங்கங்களின் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் கோரிக் கையை அரசாங்கம் ஏற்காவிட்டால், விவசாய சங்கங்கள் நாட்டிலுள்ள அனைத்து சுங்க சாவடிகளின் முன்பும் அனைத்து வாகனங்களையும் சுங்கக்கட்டணம் இன்றி செல்வதற்கு அனுமதித்திடக்கூடிய விதத்தில் போராட்டம் விரிவாக்கப்படுகிறது என்றும், தில்லியை நோக்கி வரும் இதர நெடுஞ்சாலைகளில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம்,உத்தர்கண்ட் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து பெருமளவில் விவசாயிகள் அணிவகுத்து வர வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது. (ந.நி.)

                                       *******************

இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரத பிஸ்வாஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுதும் விவசாயசங்கங்கள் மாபெரும் வகையில் நடத்தி வரும் கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஒருமைப்பாட்டையும், ஆதரவையும் விரிவாக்கிக் கொள்கின்றன. அனைத்து விவசாய சங்கங்கள் டிசம்பர் 8 அன்று அறிவித்துள்ள பாரத் பந்த்திற்கும் தங்களுடைய ஆதரவை விரிவாக்கிக் கொள்கின்றன.நாட்டின் விவசாயத்தைப் பாதுகாப்பதற்காகவும், நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காகவும் போராடிவரும், நமக்கு உணவளித்திடும் உழவர்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி, அபத்தமான குற்றச்சாட்டுகளுடன் கெடுநோக்குடன், ஆர்எஸ்எஸ்/பாஜக பிரச்சாரம் மேற்கொண்டுவருவதற்கு இடதுசாரிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றன.
மூன்று வேளாண் சட்டங்களையும், 2020 மின்சார (திருத்தச்) சட்டமுன்வடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கைகளை இடதுசாரிக் கட்சிகள் ஆதரிக்கின்றன.விவசாயிகள் பக்கம் நிற்கும் இதர அரசியல் கட்சிகள் அனைத்தும், சக்திகள் அனைத்தும் விவசாயிகள் இக் கோரிக்கைகளை ஆதரித்திட வேண்டும் என்றும், அவர்களின் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் தங்கள் அறிக்கைகளில் கோரியுள்ளார்கள்.

;