நீட் : இனியும் நீட்டிக்கக் கூடாது'
நாடு முழுவதும் நீட்தேர்வை 20.8 லட்சத்துக்கு மேற்பட்டோர் எழுதியதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வினாத்தாள் கசியவில்லை என்றும் அசம்பாவிதங்கள் நிகழவில்லை என்றும் கூறியுள்ளது. ஆயினும் முறைகேடுகள் தொடர்பாக ராஜஸ்தானிலும் ஒடிசாவிலும் 7பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவிகளிடம் நடந்த கெடுபிடிகள் சொல்லும் தரமன்று. அற்ப காரணங்களுக்காக மாணவர் களை குறிப்பாக மாணவிகளை பாடாய்ப்படுத்தி தலைவிரி கோலமாக்கியுள்ளது நீட் தேர்வு.
தேர்வுக்கு முன்னதாக பல்வேறு உயிர்ப்பலி நடப்பதுதொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தமிழ் நாட்டில் மேல்மருவத்தூர் அருகில் உள்ள அகிலி கிராமத்தில் 17 வயது இளம் குருத்து நீட் தேர்வு நெருப்பில் கருகிவிட்டது. இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை இந்த தேர்வு காவு கொள்ளுமோ?
தமிழகம் மட்டுமல்ல; நாடு முழுவதும் இத்தகைய தற்கொலைகள் நடந்து கொண்டே யிருக்கின்றன. நீட் தேர்வு பயிற்சிக்கு பெயர் பெற்ற கோட்டா நகரில் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 14 மாணவர்களின் உயிரை பலிகொண்டிருக்கிறது இந்த நீட் தேர்வு. கடந்த ஆண்டு அங்கு 17 மாண வர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நீட் தேர்வு தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் விலக்கப்பட வேண்டும். அண்மைக் காலத்தில் திணிக்கப்பட்ட இந்த நீட் தேர்வு பணமுள்ளவர்களுக்கும் பயிற்சி பெற முடிந்தவர்களுக்குமானதாக மாறிவிட்டது. சாதாரண ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமப்புற மாண வர்களுக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டது. காசுள்ளவர்க்கே கல்வி என்கிற ஒன்றிய மோடி அரசின் இந்த நீட் தேர்வு முறை கைவிடப் படுவது அவசியம்.
தமிழ்நாட்டின் ஒருமனதான நீட் விலக்கு கோரிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, நாடு முழு வதற்குமான நன்மை பயக்கும் செயலாகும். அது மட்டுமின்றி கல்வியை பொதுப்பட்டிய லிலிருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவது மிக முக்கியமானதாகும். ஏனெனில் மாநில அரசுகள் உருவாக்கி வைத்திருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் தங்கள் மாநில மாணவர்களுக்கே இடம் கிடைக்காத நிலையை இந்த நீட் தேர்வு ஏற்படுத்துகிறது.
மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் மனதில் மரணபயத்தை விளைவிக்கிறது. எனவே நீட் தேர்வு கட்டாயம் நீக்கப்பட வேண்டும்.