இணையம் முடக்கத்தில் டிஜிட்டல் இந்தியாவே முதலிடம் பிடித்திருக்கிறது. உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 150ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. உலக அளவில் பத்திரிகை சுதந்திரத்தில் ஒவ்வொரு நாடும் எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்து உலக பத்திரிகையாளர் அமைப்பான ஆர்எஸ்எஃப் தனது ஆய்வு முடிவுகளை வெளி யிட்டு வருகிறது. அதன் படி 2016ஆம் ஆண்டில் 180 நாடுகளில் 133 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 150 வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கி றது. இதுதான் இந்திய ஜனநாயகத்தை ஒன்றிய மோடி அரசு வழிநடத்தும் லட்சணம்.
‘’ஜனநாயகத்தை வலிமையாக்க வேண்டு மென்றால் அதற்குப் பத்திரிகை சுதந்திரம் அவசியம். பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது, இந்த சமுதாயம் துடிப்புள்ள தாகச் செயல்பட வழிவகுக்கிறது’’. இதைக் கூறியது வேறுயாருமல்ல, 2018இல் நமது பிரதமர் நரேந்திர மோடிதான். அப்படியென்றால் இன்று இந்தியாவில் ஜனநாயகம் படிப்படியாகச் சவக்குழியில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மோடி உறுதிப்படுத்துகிறார்.
அதேபோல் 2016 இல் மோடி அரசு 31 முறை இணையதளத்தை முடக்கியது. படிப்படியாக அடக்குமுறை அதிகரித்து 2021இல் 89 முறை இணையதளத்தை முடக்கியிருக்கிறது என்கிறது மென்பொருள் சுதந்திர சட்ட மையம். குறிப்பாக 41 முறை இணையத்தை முடக்கி அதனை 72 மணி நேரம் வரை தொடர்ச்சியாக நீட்டித்திருக்கின் றன. இந்த முடக்கங்களில் 301 முறை மொபைல் இணைய சேவைகளும் முடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் இதனை அமல்படுத்திய ஒன்றிய அரசிடமே எத்தனை முறை இணையத்தை முடக்கினோம் என்ற விபரம் இல்லை என்று கூறப்படுவதுதான்.
பாஜக மக்களவை உறுப்பினர் வருண் காந்தி யின் கேள்விக்குப் பதிலளித்த ஒன்றிய தகவல் துறை இணை அமைச்சர் இதுவரை இணைய முடக்கம் தொடர்பாக அரசிடம் எந்த தரவுகளும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இணையம் என்பது அடிப்படை மனித உரிமை; வேலை செய்வதற்கும், படிப்பதற்கும் அடிப்படை என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவுவ தாகக் கூறி இணையம் முடக்கப்படுகிறது. அப்படி யென்றால் சமூக ஊடகங்களை மட்டும்தானே முடக்க வேண்டும். அதை விடுத்து கருத்து வேறு பாடுகளை அடக்குவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது. கொரோனா செய்திகளை வெளியிட்டதற்காக 2020இல் 55 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர். தற்போது கூட 13 பத்திரிகை யாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்ற னர். காஷ்மீரின் நிலையை சொல்லவே வேண்டாம்.
ஊடகங்களில் இந்து தேசியத்தை முன்னி றுத்தும் ஆர்எஸ்எஸ் கருத்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும். மாற்றுக் கருத்துகளை தேசத் துரோகமாகச் சித்தரித்து பத்திரிகை சுதந்தி ரத்தைப் பறிப்பது, ஜனநாயகத்தின் மூச்சை பிடிப்ப தற்குச் சமம். மோடி அரசின் எதேச்சதிகாரம் ஜனநாயகத்திற்கே பேராபத்தாக முடியும்.