பாரீஸ் ஒலிம்பிக் தொடரை சீர்குலைக்க சதி ரயில் தண்டவாளங்களை தகர்த்த மர்ம நபர்கள்
உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின் 33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் வெள்ளியன்று நள்ளிரவு தொடங்கியது. தொடக்க விழாவிற்கு முன்னதாக வெள்ளியன்று காலை “கரே டு நார்ட்” ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் பாதையில் தண்டவாளங்களை தகர்த்தும், தண்டவாளங்களில் மரக் கட்டைகளை வைத்து தீ வைத்தும், அதி வேக ரயிலை கவிழ்க்கும் வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் வரும் முன்னரே அந்நாட்டு ரயில்வே அதிகாரிகள் தண்டவாள தகர்ப்பு சதியை கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக பிரான்ஸ் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் அட்லாண்டிக் பிராந்திய பகுதிகளில் ரயில் போக்குவரத்து லேசான அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமம் மற்றும் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மினி பாரீஸ் நகரத்திற்கு செல்லும் மிக முக்கிய ரயில் பாதை யான பாரீஸ் - வில்லி இடையேயான அதி வேக ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் தொடக்க விழாவிற்கு செல்ல முடியாமல் பிரான்ஸ் நாட்டின் உள்ளூர் ரசிகர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஒலிம்பிக் கிராமத்தில் பதற்றம்
ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்ட தகவல் ஒலிம்பிக் கிராமத்தில் தீயாய் பரவியது. இதனால் உள்ளூர், வெளிநாட்டு வீரர் - வீராங்கனைகள் பதற்றத்தில் உள்ளனர். இதுபோக உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் போர் சம்பவங்களின் எதிரொலியால் பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளது என பிரான்ஸ் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளதால் பாரீஸ் ஒலிம்பிக் கிராமம் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது.
பலத்த பாதுகாப்பு...
ரயில் கவிழ்ப்பு சதி வேலையை செய்தவர்கள் யாரென்று தெரியவில்லை என பிரெஞ்சு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இது தீவிரவாதிகளின் சதி இல்லை என்றும், உள்ளூர் மக்களின் போராட்டமாக இருக்கலாம் என மற்றொரு விசாரணை தகவலும் வெளியாகியுள்ளது. எனினும் உலக நாடுகளின் வீரர் - வீராங்கனைகள், அணிக்குழுவினர், அரசு சார்ந்த அதிகாரிகள் என லட்சக்கணக்கானோர் பாரீஸ் நகரில் குவிந்துள்ளதால், பிரெஞ்சு போலீஸ் படை அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுடன் பாரீஸ் முழுவதும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கு ஆதரவாக சீன வீரர்- வீராங்கனைகளை குறிவைக்கும் ஊக்கமருந்து சோதனையாளர்கள்?
விளையாட்டுப் போட்டிகளில் ஊக்கமருந்து சோதனை மிக முக்கியமானதாகும். ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினால் போட்டியில் ஆண்டுக்கணக்கில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும். போட்டி முடிந்த பின்பு ஊக்கமருந்து சோதனையில் சிக்கினால் வென்ற பதக்கங்கள் கூட பறிக்கப்படும். ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்கமருந்து சோதனை கட்டுப்பாடு மிக மோசமான அளவில் இருக்கும். இதனால் விளையாட்டுப் போட்டிகளில் வீரர் - வீராங்கனைகளின் திறமையை விட ஊக்கமருந்து சோதனை மிக முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு ஒலிம்பிக் தொடரில் பதக்க வேட்டை நிகழ்த்தும் சீன வீரர்- வீராங்கனைகளின் ஆதிக்கத்தை தகர்க்கும் முயற்சியில் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஐரோப்பா - அமெரிக்காவின் கூட்டுச் சதி திட்டத்திற்காக ஊக்கமருந்து சோதனையாளர்களை பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டி களமிறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையானது என சீன நீச்சல் வீரர் கின் ஹையாங்கும் கூறியுள்ளார்.