உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின்
33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு தில்லியில் உற்சாக வரவேற்பு
பாரீஸ் ஒலிம்பிக்கில் 22 வயதான மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே சீசனில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்த நிலையில், பதக்க நாயகி மனு பாக்கர் புதனன்று காலை தில்லி திரும்பினார். பெற்றோர் ராம் கிஷன் மற்றும் தாய் சுமேதா ஆகியோர் மனு பாக்கரை முத்தமிட்டு விமான நிலையத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர். தொடர்ந்து ரசிகர்கள் மலர் கொத்துகள் வழங்கியும், மனு பாக்கரை தோள் மீது சுமந்து ஊர்வலமாக கொண்டு சென்றும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மீண்டும் பாரீஸ்...
ஞாயிறன்று நடைபெறும் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக சனியன்று மீண்டும் பாரீஸுக்குச் செல்லும் மனு பாக்கர், ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.