games

img

உலகக் கோப்பை கால்பந்து 2022... - இன்னும் 28 நாட்கள்

தப்பிக்குமா ஈக்வடார்?

22வது சீசன் கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் துவக்க  ஆட்டத்தில் களமிறங்கும் தென் அமெரிக்கா  நாடான ஈகுவடார் அணிக்கு மற்ற அணிகளை காட்டிலும் சற்று வித்தியாச மான பிரச்சனை உள்ளது. அது யாதெனில் தகுதிச்சுற்று ஆட்டங்களில் விளை யாடிய பின்கள வீரரான பைரன் கஸிடிலோவின் குடியுரிமைப் பிரச்சனை ஈகுவடார் கால்பந்து உலகிற்கு மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. கொலம்பியாவில் பிறந்த பைரன் போலிச் சான்றிதழைச் சமர்ப்பித்து ஈகுவடார் அணி யில் இடம்பெற்றுள்ளார் என புகார் எழுந்துள்ளது.  உலகக் கால்பந்து சம்மேளனம் (பிபா) இந்த விவகாரம் மற்றும் புகாரை நிராகரித்துவிட்டது என்ற போதிலும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத கடுப்பில் சிலி கால்பந்து சம்மேளனம் பைரன் கஸிடிலோவின் குடியுரிமைப் பிரச்சனையை விடுவதாக இல்லை. உலக விளையாட்டு தர்க்கப்பரிகார நீதி மன்றத்தை அணுகியுள்ளது சிலி.  இந்த விவகாரம் தொடர்பான இறுதித் தீர்ப்பு நவம்பர் முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே ஆகிய அணிகளைத் தொடர்ந்து நான்காவது அணியாக தென்  அமெரிக்காவில் இருந்து ஈகுவடார் உலகக் கோப்பைப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 2002, 2006 மற்றும் 2014 ஆண்டுகளில் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளை யாடியுள்ள ஈகுவடார் 2006ல் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறியதே அதிகபட்சமாகும். மற்ற 2 தொடர்களில்  ஈகுவடார் பெரிதாக சோபிக்கவில்லை.  ஈகுவடார் அணியின் பெரும்பாலான வீரர்கள் ஐரோப்பிய கால்பந்து லீக்கில் விளையாடுபவர்களாவார்கள் என்பதால் உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் 7 வெற்றி, 6 தோல்வி, 5 சமநிலை எனப் பெற்றுள்ள ஈகுவடார் அர்ஜென்டினா அணிக்கு இணையாகக் கோல் அடித்துள்ளது. மொத்தம் 27 கோல்கள்.

ஈகுவடார் லீக் ஆட்டங்கள்

நவம்பர் 20ல் (துவக்க ஆட்டம்) கத்தார், 25ல் நெதர்லாந்து,
29ல் செனகல் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது ஈகுவடார்.