districts

img

வேப்பூர் அருகே ஆற்று பாலம் உடைப்பு: இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி செல்லும் மக்கள்

வேப்பூர், அக். 22- கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் கோமுகி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் அமைக்கபட்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நல்லூர் ஒன்றிய நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது,இந்த கிராமத்தை சேர்ந்த முருகேசன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அவரது உடலை சனிக்கிழமை அடக்கம் செய்ய நகர் கிராம மயானத்திற்கு தூக்கிச் சென்றனர். அப்போது கோமுகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் இடுப்பளவு தண்ணீரில் ஆற்றை கடந்து மயானத்திற்கு கொண்டு சென்றனர். ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் வயதானவர்கள் முதல் அனைவரும் ஆற்றை கடந்து செல்ல முடியவில்லை. மேலும், இறுதி சடங்கிலும் கலந்துகொள்ள முடியாமல் கரையிலேயே நின்றுவிட்டனர். இந்த நிலையில் இருந்து விடுபடுவதற்கு கோமுகி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;