மதுரை:
பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவது குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றுசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “அரசுத் துறை சார்ந்த பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர், திடீரென்றோ, பணியின் போது ஏற்படும் விபத்தில் இறந்தால் அவருக்கு இழப்பீடு உள்ளிட்ட நிவாரணங்களை யார் தருவது என்பதில் பெரும் குளறுபடி உள்ளது.
இதுதொடர்பாக தெளிவான விதிகள் இல்லை. பல்வேறு வழக்குகளில் விதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சட்டம் இயற்றுவது, விதிகள் உருவாக்குவது மற்றும் திருத்தம் செய்வது தொடர்பான பணிகளில் சட்ட ஆணையம் தான் முடிவெடுக்கும். 22-வது சட்ட ஆணையம் கடந்தபிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்டது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியைத் தலைவராகக் கொண்டும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோரை உறுப்பினராகக் கொண்டும் சட்ட ஆணையம் செயல்படும். ஆனால், சட்ட ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இதுவரை நியமிக்கவில்லை. இதனால் சட்டம் தொடர்பான பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கவும், இழப்பீடு தொடர்பான சட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் .
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை சனிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு ,மத்திய அரசுத் தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதன் பின் மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.