articles

img

அகில இந்திய மாநாடு 1

மகளிரும் மார்க்சியமும்! - பிருந்தா காரத்

வர்க்கச் சுரண்டலோடு, பாலின ஒடுக்குமுறையையும் பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். பெண் தொழிலாளி சுரண்டப்படுவது என்பது, ஓர் ஆண் தொழிலாளியின் பிரச்சனைகளைவிட கூடுதல் பரிமாணம் கொண்டது. சுரண்டல்தன்மை வாய்ந்த சமூக-பொருளாதாரக் கட்டமைப்பில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள பெண்களை அதிலிருந்து விடுதலை பெறச் செய்வதற்கான போராட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியானது அது உருவாக்கப்பட்ட 1920ம் ஆண்டிலிருந்து முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது. பெண்களின் பிரச்சனைகளில் நேரடியான இயக்கங்களை நடத்திடுவதில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஏ.கே. கோபாலன், பி. சுந்தரய்யா, பி.டி. ரணதிவே போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் முக்கியப் பங்காற்றினர். இடதுசாரி அரசுகளின் முன்முயற்சிகள் மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமைந்த அரசுகள், பெண்களின் நிலையையும், அவர்களது உரிமைகளையும் மேம்படுத்திட குறிப்பான முன்முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டன.

கல்வி மற்றும் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதுடன், நிலத்தின் மீதான பெண்களின் உரிமை, பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களின் உரிமை, கேரளாவின் குடும்பஸ்ரீ இயக்கம், இதர இரண்டு மாநிலங்களின் சுயஉதவிக் குழு இயக்கங்கள் போன்ற முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை பரவலாக்கிடுவது போன்றவை இத்தகைய முன்முயற்சிகளில் சில ஆகும். சித்தாந்தத் தெளிவிற்கான தேவை தெளிவானதோர் சித்தாந்தம் மற்றும் அரசியல் கட்டமைப்பு என்பது இல்லாமல் எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியும் தனது பணியை வெகுஜன மக்களின் எந்த பிரிவினரிடையேயும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. பிரெடரிக் ஏங்கெல்சின் ‘குடும்பம், அரசு மற்றும் தனிச்சொத்தின் தோற்றம்’ என்ற நூல் மற்றும் “பெண்களின் பிரச்சனைகள்” என்கிற ஆகஸ்ட் பெபல்லின் ஆய்வுக் கட்டுரை ஆகியன எழுதப்பட்ட காலம் முதலே, பெண்களின் பிரச்சனைகள் என்பது கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி ஆதரவாளர்களிடையே விவாதத்திற்கான பொருளாக இருந்து வருகிறது. இந்தியாவில் “அடிப்படை வர்க்கங்கள்” எனச் சொல்லப்படுவனவற்றில் கணிசமான பகுதியினர் வர்க்க, சாதிய மற்றும் பாலின ரீதியாகப் பிரிந்துள்ளனர். இத்தகைய நுணுக்கமான சமூக-பொருளாதார கட்டமைப்போடு, நிலப்பிரபுத்துவ மற்றும் அரை-நிலப்பிரபுத்துவ உறவுகளுடன் பின்னிப் பிணைந்த முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் பாதையில் இந்திய சமூகம் உள்ளபோது, பெண்களின் பிரச்சனைகள் என்பது இந்தியக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட வேண்டும். முந்தைய அணுகுமுறை தேச விடுதலைப் போராட்டத்தின் பகுதியாக, அகில இந்திய பெண்கள் மாநாடு போன்ற பொதுவான மாதர் அமைப்புகளில் ஆங்கிலேயர்களை எதிர்த்து தேச விடுதலைக்காக உறுதியோடு போராடுவது என்ற மனநிலையோடு கம்யூனிஸ்ட் பெண்கள் பணியாற்றினர். எனினும், 1940களில் வங்கத்தில் ‘மஹிளா ஆத்ம ரக்ச சமிதி’ என்கிற அமைப்பை 1942ம் ஆண்டு கம்யூனிஸ்ட் பெண்கள் உருவாக்கினர். மகாராஷ்டிரா மாநிலத்தில், ஜவுளித் தொழிலில் பணியாற்றி வந்த பெண் தொழிலாளர்களிடையே தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டியமைக்க கம்யூனிஸ்ட் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தனர். ஆந்திரப் பிரதேசத்தில், தெலுங்கானா போராட்டத்தில் கம்யூனிஸ்ட் பெண்கள் தீரத்துடன் பங்கேற்றனர். மாதர் சங்கம் உதயம் நாடு விடுதலை அடைந்த பின்னர், 1954ம் ஆண்டில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் என்ற அகில இந்திய அளவிலான மாதர் அமைப்பில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்தவர்கள் இணைந்தனர்.

1964ம் ஆண்டிற்கு பிந்தைய காலகட்டத்தில், மாநில அளவிலான பல்வேறு அமைப்புகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்த பெண்கள் பணியாற்றி வந்தனர். இவையெல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு அகில இந்திய அளவில் 1981ம் ஆண்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உருவாக்கப்பட்டது. கட்சித் திட்டமும், குடும்ப ஜனநாயகமும் விவசாயப் புரட்சி நடைபெற்ற சூழலில், சமூக ஒடுக்குமுறை என்ற பிரச்சனையை 1964ல் நிறைவேற்றப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சித் திட்டம் முன்னிறுத்தியது. மக்கள் ஜனநாயக முன்னணி பற்றி குறிப்பிடுகையில், “சம வேலைக்கு சம கூலி அளிப்பது, பெண்களைப் பாதிக்கின்ற அனைத்து சமூகக் குறைபாடுகளையும் களைந்திடுவது, சொத்துரிமை, திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டங்களின் அமலாக்கம்” ஆகியவற்றை முன்னிறுத்தியது. 2000வது ஆண்டில் மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டத்தில் “குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டுவேலை ஆகியனவற்றில் பொருத்தமானதொரு ஆதரவு நடைமுறை என்பது குடும்பக் கட்டமைப்பு ஜனநாயகப்படுத்தப்படுவதனை வற்புறுத்திடுவதின் பகுதியாக இருக்கும்” என்ற மிக முக்கியமானதொரு வாக்கியம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பாலின அடிப்படையிலான வேலைப் பிரிவினைக்கு எதிரான மார்க்சிய நிலைபாட்டையும், குடும்பம் என்கிற எல்லைக்குள் ஜனநாயகத்தை விரிவுபடுத்திட வேண்டியதன் அவசியத்தையும் இது அளிக்கிறது. பெண்கள் மீதான சுரண்டலுக்கு எதிரான மார்க்சிய அணுகுமுறை இந்த அணுகுமுறையை கீழ்க்கண்டவாறு தொகுத்து அளித்திடலாம்: 1.    இந்திய நாட்டில் பெண்கள் சுரண்டப்பட்டு, ஒடுக்கப்படுவதற்கும், நிலப்பிரபுத்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ உறவுகளோடு சேர்ந்திருக்கும் முதலாளித்துவ சமூக-பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் நேரடியான தொடர்பு உள்ளது. 2.    ஆணாதிக்க கலாச்சாரம் காரணமாக பெண்கள் அனுபவித்திடும் பாரபட்சங்களுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்துப் பெண்களுக்கும் பங்கிருக்கிறது.

3.    வர்க்கச் சுரண்டலோடு, பாலின ஒடுக்குமுறையையும் எதிர்கொண்டு பெண் தொழிலாளர்கள் இரட்டைச் சுமைகளை எதிர்கொள்கின்றனர். 4.    சாதிய நடைமுறைகள் என்பவை பெண்கள் மீதான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளோடு, நச்சுத்தன்மை வாய்ந்த மிக மோசமான மூன்றாவது படிநிலையாக இணைகின்றன. கட்சியில் பெண்கள் 1968ல் நடைபெற்ற 8வது அகில இந்திய மாநாட்டு அறிக்கையில் பெண் உறுப்பினர்கள் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட ஒரு சதவீதம் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. “மாதர் இயக்கங்களை வளர்த்தெடுப்பதில் அல்லது நமது வர்க்க ஸ்தாபனங்களில் பெண்களைக் கொண்டு வருவதிலும், நமது கட்சியினுள் பெண்களை உறுப்பினர்களாக சேர்ப்பதிலும் நாம் அடைந்துள்ள தோல்வி என்பது நமது கட்சியில் காணப்படும் மற்றொரு முக்கியமான குறைபாடாகும்” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. தற்போது, கட்சி உறுப்பினர்களில் பெண் உறுப்பினர்களின் சதவீதம் அகில இந்திய அளவில் கிட்டத்தட்ட 15 சதவீதமாக உள்ளது. திரிபுராவில் இது 25 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. ஒவ்வொரு கட்சிக் கிளையிலும் பெண் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ற முடிவை பல கமிட்டிகள் எடுத்துள்ளன. செங்கொடி இயக்கத்திற்காக தங்களது இன்னுயிரை ஈந்த பெண்களை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான நமது முன்னணி ஊழியர்களின் அளப்பரிய தியாகத்தையும் என்றென்றும் நினைவு கூர்வோம். அதேநேரத்தில், புத்துணர்வூட்டப்பட்ட ஆற்றலோடும், தத்துவார்த்தத் தெளிவோடும்,

ஒற்றுமையோடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தருணமாக இது உள்ளது. இந்த தருணத்தில், கட்சியிலும், இயக்கத்திலும் சேர்ந்திட இளந்தலைமுறை பெண்களுக்கு ஊக்கம் அளித்திட்ட மாபெரும் பெண் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு நமது வீர வணக்கத்தைச் செலுத்துவோம். கோதாவரி பருலேக்கர், விமலா ரணதிவே, அகல்யா ரங்கனேக்கர், கனக் முகர்ஜி, பங்கஜ் ஆச்சார்யா, சுசீலா கோபாலன், ஜானகி அம்மாள், பாப்பா உமாநாத், மங்களேஸ்வரி தேவ் வர்மா, இலா பட்டாச்சார்யா, (கேப்டன்) லட்சுமி செகால், மல்லு சுவாராஜ்யம், எம். உதயம் போன்றோர் அத்தகைய புரட்சிகரத் தலைவர்கள் ஆவர். அவர்கள் அனைவருக்கும் நமது செவ்வணக்கம். தமிழில்: எம்.கிரிஜா