ஒரு முறை குமுதம் ஏட்டில் அரசு கேள்வி-பதில் பகுதியில் எது கடினம்? கட்சி நடத்துவதா? பத்திரிகை நடத்துவதா? என்று வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கட்சிப் பத்திரிகை நடத்துவது தான் கடினம் என்று அரசு பதிலளித்திருந்தார். கட்சிப் பத்திரிகை நடத்துவதே கடினம் என்றால் கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகை நடத்துவது என்பது கல்லிலே நார் உரிப்பது போல கடினமானது. காற்றிலே சித்திரம் வரைவது போல சிரமமானது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனும் மகத் தான மக்கள் இயக்கம் தன்னுடைய ஏடாகிய தீக்கதிரை கடந்த 60 ஆண்டுகளாக கம்பீரமாக நடத்தி வருவது என்பது ஒரு சாதனைச் சரித்திரம் என்றே சொல்ல வேண்டும்.
1960-ஆம் ஆண்டுகளில் ஒன்றுபட்ட இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிக்குள் கடுமையான கருத்து மோதல் நிகழ்ந்து வந்தது. வர்க்க சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதற்காக பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைத் தொடங்கிய தலைவர்கள் தெளி வானதொரு சித்தாந்தப் போராட்டத்தை கட்சிக்குள் நடத்தி வந்தனர். அவர்களின் கருத்துக்களைத் தாங்கி வருகிற ஏடாகத்தான் தீக்கதிர் மலர்ந்தது. அன்றைய 101 பேர் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவரும் பிரபலமான தொழிற்சங்கத் தலைவருமான தோழர் எல்.அப்பு என்கிற அற்புதசாமி சிறையிலி ருந்த தலைவர்களுடன் ஆலோசித்து கருத்தியல் போராட்டத்தை முன்னெடுக்க புரட்சிகர ஏடு ஒன்றை தொடங்குவதென முடிவு செய்தார்.
தீக்கதிருக்கான முதல் விதைகளை கோயம் புத்தூர் மாவட்ட தொழிலாளர்கள் அள்ளித்தந்தனர். அதை முதலாகக் கொண்டு 1963-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி அன்று தீக்கதிரின் முதல் ஏடு வெளி யானது. முகப்பில் “கோவை தொழிலாளி வர்க்கம் கொடுத்த செந்தீக்கதிரை உயர்த்திப் பிடித்திடு வோம்” என்ற வாசகங்கள் இடம் பெற்றன. புதிய பத்திரிகைக்கு ‘தீப்பொறி’ என்ற பெயர் கேட்கப்பட்டது. ஏற்கனவே அந்தப் பெயரில் ஒரு பத்திரிகை நடத்தப்பட்டு இருந்ததால், அடுத்து கேட்கப்பட்ட “தீக்கதிர்” என்ற பெயர் கிடைத்தது. மாமேதை லெனின் நடத்திய “இஸ்கரா” என்ற பத்திரி கையின் தமிழ் பெயர் தான் தீக்கதிர். இந்தப் பெயர் கிடைக்கவில்லையென்றால் தீச்சுடர் என்று கேட்க வும் முடிவு செய்திருந்தனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆண்டவர் நகரில் உள்ள கட்டடத்தின் முதல் மாடியில் இருந்த ஒரு அறை தான் தீக்கதிர் அலுவலகம். தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்து பத்திரி கைக்கான முகவர்களை நியமிப்பதிலும் சந்தா பிடிப்ப திலும் முக்கியப் பங்காற்றியவர் ஆர்.ராமராஜ். தோழர் சோலை தீக்கதிரின் பணிகளை முழுமையாகக் கவ னித்துக்கொண்டார். தீக்கதிரின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர் மின்வாரியத் தொழிலாளராக இருந்த தோழர் எம்.என்.ராவுண்ணி. ஜனசக்தியில் பணியாற்றிக் கொண்டே தோழர் கள் டி.எஸ்.தினகரன், சூரிய நாராயணன், வி.கே.பால கிருஷ்ணன், என்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தீக்கதி ருக்கு உதவினர்.
தோழர்கள் உசிலை தா.சோமநாதன், கோவை ஈஸ்வரன், அன்று தமிழரசுக்கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த வே.நாகராஜன் ஆகி யோரும் வங்கி ஊழியராக இருந்த வேதா என்ற வேதாந்த தேசி கனும் தீக்கதிருக்கு கட்டுரைகள் தந்து உதவினர். அன்றைக்கு தீக்கதிரை அச்சடித்துத்தரவே பல அச்சகங்கள் தயங்கின. சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் டிரெடில் மிஷின் மூலம் மொழி யரசி அச்சகம் என்ற சிறு அச்சகத்தை நடத்தி வந்த புலவர் வே.புகழேந்தி தீக்கதிரை அச்சிட்டுத் தந்தார். மின்சாரம் இல்லாத இயந்திரத்தில் காலால் மிதித்து ஒவ்வொரு பக்கமாக அச்சிட வேண்டும். நான்கு பக்கங்கள் கொண்ட தீக்கதிர் பத்து பைசா விலையில் முதன் முதலாக வெளிவந்தது. தீக்கதிர் தொழிலாளர்களிடம் செல்வாக்கு பெற தொடங்கியது. தொழிலாளர்கள் எழுதிய கவிதைகளைப் பிரசுரித்த தீக்கதிர் இதில் இலக்கணத்தைத் தேடாதீர்கள். தொழி லாளர்களின் இதயத்தைத் தேடுங்கள் என்று கூறப் பட்டிருந்தது. பாவலர் வரதராஜன் தெருப்பாடகன் என்ற புனை பெயரில் பாடல் ஒன்றை எழுதியிருந்தார்.
சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தலைவர் கள் புனை பெயர்களில் தீக்கதிரில் எழுதினர். தோழர் பி.ராமமூர்த்தி மார்க்சியவாதி என்ற பெயரிலும் என். சங்கரய்யா கம்யூனிஸ்ட் என்ற பெயரிலும் வி.பி.சிந்தன் பி.தேவராஜ் என்ற பெயரிலும் ஏ.பாலசுப்பிரமணியம் மேகநாதன் என்ற பெயரிலும் கட்டுரை எழுதினர். தோழர் முத்தையா எழுதிய குறிப்புகள் பெயரிடப் படாமல் வெளிவந்தன. ஆசிரியர் குழுவுக்கு என்.சங்கரய்யாவும் நிர்வாகத் திற்கு தோழர் வி.பி.சிந்தனும் பொறுப்பேற்று வழி நடத்தினர். இந்நிலையில் சைதாப்பேட்டையில் இயங்கிய கீதா அச்சகத்தில் சிலிண்டர் மிஷினில் தீக்கதிர் அச்சிடப் பட்டது. சத்தியநாராயணன் என்பவர் இந்த அச்சகத் தை நடத்தி வந்தார். தீக்கதிர் பக்கங்களும் விலையும் அதிகரிக்கப்பட்டது. சைதாப்பேட்டை வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் இருந்த ஒரு சிறு அறை தீக்கதிர் அலுவலகமாகச் செயல்பட்டது. அப்புவைத் தொடர்ந்து எம்.என்.ராவுண்ணி-யை ஆசிரியராகக் கொண்டு தீக்கதிர் வெளிவந்தது. 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பகோணத்தில் நடை பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில கவுன்சில் கூட்டத்திலிருந்து தோழர் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட 29 தோழர்கள் வெளிநடப்புச் செய்தனர். அதே ஆண்டு ஏப்ரல் கடைசி வாரத்தில் தில்லியில் கூடிய கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்திலிருந்து தோழர்கள் பி.சுந்தரய்யா, இஎம்எஸ், ஜோதிபாசு, பி. ராமமூர்த்தி, சுர்ஜித், என்.சங்கரய்யா, வி.எஸ்,அச்சு தானந்தன் உள்ளிட்ட 32 தேசியக் கவுன்சில் உறுப்பி னர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1964-ஆம் ஆண்டு உருவான பின்பு கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக அறிவிக்கப்பட்டது, 1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி தீக்கதிர், கம்யூனிஸ்ட் வார ஏடு என்ற குறிப்புடன் என்.சங்கரய்யாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரத் தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை சீன ஏஜெண்ட்டுகள் என்று அவதூறு செய்தனர். இதனால் தீக்கதிரை அச்சிட்டு வெளியிடுவது பெரும் சிரமமான காரியமாக இருந்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். தீக்கதிரை அச்சிட்டுத் தந்த சத்திய நாராய ணனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அவர் கட்சி உறுப்பினர் இல்லையென்றபோ தும் தீக்கதிரை அச்சிட்டு தந்ததற்காகவே கைது செய்யப்பட்டார்.
1967-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற விருந்தது. அப்போது கட்சியின் மாநிலக்குழு அலு வலகம் டாக்டர் நடேசன் சாலையில் இயங்கி வந்தது. அங்கு ராஜேஷ் என்பவர் டைம்ஸ் அச்சகம் ஒன்றை நடத்தி வந்தார். அவரிடமிருந்த சிலிண்டர் இயந்திரத்தை விலைக்கு வாங்கி தீக்கதிரை சொந்த மிஷினில் அச்ச டித்து கட்சி வெளியிடுவது தொடங்கியது. தீக்கதிரின் ஆசிரியராக தோழர் கே.முத்தையா நியமிக்கப்பட்டு அவரது பொறுப்பின் கீழ் தீக்கதிர் வெளியானது. 1969-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு அலுவலகம் மதுரைக்கு மாற்றப் பட்டது. வடக்குச்சித்திரை வீதி முதலாம் சந்தில் வாட கைக் கட்டடம் ஒன்றின் மாடியில் மாநிலக்குழு அலுவல கமும் கீழ் பகுதியில் தீக்கதிர் அலுவலகமும் செயல் பட்டது. 1971-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது தீக்கதிர் நான்கு பக்கங்கள் கொண்ட நாளேடாக சிறிது காலம் வெளிவரத் தொடங்கியது. பின்னர் 1973-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நாளேடாக தொடர்ந்து வெளி வரத் தொடங்கியது.
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி மதுரையில் ஜன சக்தியை அச்சிட புறவழிச்சாலையில் இடம் ஒன்றை வாங்கியிருந்தது. தோழர் பி.ராமமூர்த்தியின் பெரும் முயற்சியால் 1973-ஆம் ஆண்டு தற்போது தீக்கதிர் அலு வலகம் உள்ள இடம் விலைக்கு வாங்கப்பட்டது. தீக்கதிருக்கான இடத்தை வாங்கி விரிவாக்கியதில் நீண்ட காலம் பொது மேலாளராக பணியாற்றிய தோழர் ஏ.அப்துல்வஹாபுக்கு பெரும் பங்குண்டு. 1973-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி தீக்கதிர் அலுவலகக் கட்டடத்தை பி.ராமமூர்த்தி திறந்து வைத்தார். இங்கேயே கட்சியின் மாநிலக்குழு அலுவலகமும் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் இங்கிருந்து கடந்த 50 ஆண்டுகளாக தீக்கதிர் வெளி வருகிறது. 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட சூழ்நிலையில் தீக்கதிரை நடத்த தோழர் கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. மற்ற பத்திரிகை களுக்கு ஒற்றை தணிக்கை என்றால் தீக்கதிருக்கு இரட்டைத் தணிக்கை. ஒவ்வொரு நாளும் அதிகாரிக ளிடம் காட்டித் தான் கட்டுரைகளை வெளியிட முடியும். பல சமயங்களில் மொத்த கட்டுரையையும் அடித்து விடுவார்கள். பின்னர் வேறு கட்டுரையை எழுதிக் காட்டி வெளியிட வேண்டும்.
தணிக்கை ஆரம்பித்த முதல் நாளன்றே தோழர் கே.ரமணி ஊட்டி பிலிம் தொழிலாளர் போராட்டம் பற்றி எழுதிய கட்டுரையை முதலில் ஒரு சில வரிகளை அடித்து பின்னர் சில பாராக்களை நீக்கி பின்னர் கட்டு ரையையே நீக்கிவிட்டார்கள். தலையங்கத்தையும் நீக்கி விட்டார்கள். இனிமேல் புதிதாக எழுதி அச்சிட முடி யாது. தலையங்கப் பகுதியை வெற்றிடமாக விட்டு விடுகிறோம் என்று தீக்கதிர் தோழர்கள் கூறியுள்ள னர். முதலில் சரியென்று ஒப்புக்கொண்ட அதிகாரி ஏதா வது எழுத வேண்டுமெனக் கூறியுள்ளார். தலையங்கப் பகுதியில் “என்னத்த எழுத” தோழர் ஐ.மாயாண்டி பாரதி எழுதித்தர கோபமடைந்த அதிகாரி, அப்படிப் போடக்கூடாது என்று சீறியுள்ளார். ஒவ்வொரு நாளும் தீக்கதிரை கொண்டு வருவது பெரும் போராட்டமா கவே இருந்தது என நினைவு கூர்ந்துள்ளார் தீக்கதிர் இரா.நாராயணன். 1977-ஆம் ஆண்டு தேர்தலுக்குப்பிறகு தான் தீக்கதி ரால் மூச்சுவிட முடிந்தது. பின்னர் அவசர நிலைக் காலம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போதைய ஆசிரியர் எம்.ஆர். வெங்கட்ராமன் அவசர நிலைக் காலத்தில் அதிகாரிக ளின் அத்துமீறல் குறித்து விரிவாகப் புகார் செய்ததை யடுத்து தணிக்கை அதிகாரி ஜி.வெங்கட்ராமன் என்பவர் விசாரணைக் கமிஷனால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளார்.
1987-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று மதுரை தீக்கதிர் அலுவலகத்தின் புதிய வெப் ஆப்செட் இயந்திரத்தை கேரள முதல்வர் இ.கே.நாயனார் தொடங்கி வைத்தார். 1991-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எவ்விதக் காரணமும் இன்றி சமூக விரோதிகள் மதுரை தீக்கதிர் அலுவலகத்திற்கு தீ வைத்தனர். தோழர் ஆர்.ராமராஜ் கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். தோழர் அருணன் உள்ளிட்ட பலருக்கும் ரத்தக்காயம் ஏற்பட்டது. தீக்கதிர் அலுவலகத்தின் ஒரு பகுதியும் பேப்பர் ரீல்களும் எரிந்த நிலையிலும் மறுநாள் வழக்கம் போல் வெளிவந்தது என்பது தீக்கதிர் தோழர்களின் நெஞ்சு ரத்திற்கு சாட்சி சொல்வது நெகிழ்வான செய்தி யாகும்.
1993-ஆம் ஆண்டு தீக்கதிரின் 30-ஆம் ஆண்டு விழா மதுரையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளார், அமைச்சர் கே.பி.கந்தசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி சென்னை பதிப்பு தொடங்கப்பட்டது. முதல் இதழை தோழர் இ.எம்.எஸ். வெளியிட தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெற்றுக்கொண்டார். 2007-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி கோயம் புத்தூர் பதிப்பு தொடங்கப்பட்டது. முதல் இதழை தோழர் பிரகாஷ்காரத் வெளியிட மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.நல்ல கண்ணு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி பதிப்பு தொடங்கப்பட்டது. முதல் இதழை சீத்தாராம்யெச்சூரி வெளியிட முதுபெரும் தலைவர் ஆர்.உமாநாத், கே.வரதராசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 2013-ஆம் ஆண்டு தீக்கதிர் பொன்விழா திருவா ரூரில் தொடங்கி மதுரையில் நிறைவு பெற்றது. எண்மப் பதிப்பு தீக்கதிர் இ-பதிப்பு 2012-ஆம் ஆண்டு நாகப்பட்டி னத்தில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் பிரகாஷ்காரத்தால் வெளியிடப்பட்டது.
தீக்கதிர் எண்மப் பதிப்பு 2015-ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. 2016-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி முதல் கோயம்புத்தூரில் தனி அலுவலகத்தில் செயல்படத் தொடங்கியது. தீக்கதிர் செயலி, முகநூல், டுவிட்டர், இன்ஸ்டா கிராம், கூகுள் ஆப், யூ-டியூப் என அனைத்து சமூக ஊட கங்களிலும் வெளிவந்து கொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கான வாசகர்களை தீக்கதிர் எண்மப் பதிப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தீக்கதிர் ஆசிரியர்களாக எல்.அற்புதசாமி, ராமுண்ணி, என்.சங்கரய்யா, எம்.ஆர்.வெங்கட்ரா மன். கே.முத்தையா, வே.மீனாட்சி சுந்தரம், முதன்மை ஆசிரியராக உ.ரா.வரதராசன், இணை ஆசிரியராக சு.பொ.அகத்தியலிங்கம், வே.பரமேசுவரன் ஆகி யோர் செயல்பட்டுள்ளனர்.
கொரோனா கொடுங்காலத்தில் பத்திரிகையை அச்சிட்டு கொண்டு செல்ல முடியாத நிலையிலும் கூட எண்மப் பதிப்பாக, இ-பதிப்பாக தீக்கதிர் வெளி வந்தது. கடந்த 60 ஆண்டுகளில் தீக்கதிர் தனது பய ணத்தை ஒரு போதும் நிறுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோலிசக் கருத்துக்கள், ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, மாநில உரிமைகள், தாய்மொழி பாதுகாப்பு, மனித உரிமை கள், தொழிலாளர்-விவசாய வர்க்கப் போராட்டங்கள் என தீக்கதிர் தன்னுடைய இலக்கில் ஒரு போதும் சமர சம் செய்து கொள்ளாமல் சமர் செய்து வருகிறது.
செம்மலர்
தீக்கதிர் அலுவலகம் மதுரை வடக்கு சித்திரை வீதியில் வெளிவந்து கொண்டிருந்தபோது அந்த அலுவலகத்திலிருந்து தான் தோழர் கு.சின்னப்ப பாரதியை ஆசிரியராகக் கொண்டு 1970-ஆம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்ட செம்மலர் இலக்கிய மாத இதழ் இடையறாது வெளிவந்து கொண்டிருக்கிறது. தீக்கதிர் அலுவலகத்தின் ஒரு பகுதியாக கடந்த 52 வருடங்களாக தோழர் தி.வரதராசன் செம்மலரில் பணியாற்றி வருவது பத்திரிகை உலக வரலாற்றில் ஒரு சாதனையாகும்.
தீக்கதிர் ஏட்டின் 60 ஆண்டுகால பயணத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தோழர்கள் பற்பலர். ஆசிரியர் குழு, நிர்வாகப் பிரிவு, அச்சகம் என அலுவலகத்திலும் செய்தியாளர்க ளாகவும் முகவர்களாக களத்திலும் பணியாற்றும் தோழர்களின் உழைப்பே இந்த சாதனையை நிகழ்த்தி யிருக்கிறது. அத்தனைக்கும் அடித்தளம் தீக்கதிர் வாச கர்களே. அவர்கள் அனைவரும் வணக்கத்திற்கு ரியவர்கள்.
இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நிகழ்த்தி இல்லாமை இல்லாத உலகை உருவாக்க நடக்கும் போரில் முன்னணி போர் வீரனாக தொடர்ந்து செயல்பட தீக்கதிர் இந்நாளில் உறுதியேற்றுக் கொள் கிறது.