நவீன தாராளமய யுகத்தின் தீவிரமான கட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் ஆக்கப்பூர்வமான திட்டங்களை உருவாக்க, கட்சி உறுப்பினர்களுக்கும் ஊழியர்களுக்கும் அரசியல்-பொருளாதார கல்வியை வழங்க வேண்டும். பயிற்சி வகுப்புகள், முகாம்கள் நடத்தினாலும், நமது தோழர்களை அன்றாடம் அரசியல்படுத்துவது பிரதான பணியில் தீக்கதிருக்கு முக்கியப் பங்கு உண்டு.
தீக்கதிரின் பங்களிப்பு
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தீக்கதிர் தனது பணியை திறம்பட செய்து வருகிறது. அன்றாட அரசியல் நிகழ்வுகளை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், நமது கட்சியை பலப்படுத்தவும், வளர்த்தெடுக்கவும், குறைகளை சரி செய்யவும், முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் உதவுகிறது. மாநாட்டு விவாதங்களுக்கான கருத்தியல் தளத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொதுமக்களுக்கும், தோழர்களின் அன்றாட வர்க்கப் போராட்டத்திற்கும் வலு சேர்க்கும் பணியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணியில் நின்று வழிகாட்டி வருகிறது. இன்றைய சமூக ஊடக வளர்ச்சியில் நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள் பரவினாலும், அவற்றின் உண்மைத் தன்மை குறித்த கேள்விகள் எழுகின்றன. பணம் படைத்த முன்னணி பத்திரிகைகள் எழுதத் தயங்குகிற அல்லது மறைக்கின்ற செய்திகளை சரியான முறையில் தீக்கதிர் நாளேடும், டிஜிட்டல் பதிப்பும் வெளிக்கொணர்கின்றன.
ஏகாதிபத்திய எதிர்ப்பில் தனித்துவம்
சர்வதேச அளவில் ரஷ்யா-உக்ரைன் போர், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போர், ஆப்ரிக்க நாடுகளில் அமையும் ராணுவ ஆட்சிகள், சிரியாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, வங்கதேச ஆட்சி மாற்றம் என அனைத்தையும் வெறும் போர் என்றும் கிளர்ச்சி என்றும் மட்டுமே பெரும்பாலான ஊடகங்கள் சித்தரிக்கின்றன. குறிப்பாக, உரிமைக்காக போராடும் பாலஸ்தீனர்களை தீவிரவாதிகள் என்றும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சிரியாவை கவிழ்த்த சக்திகளை போராளிகள் என்றும், வங்கதேச ஆட்சி மாற்றத்தை புரட்சி என்றும் அமெரிக்க ஊடகங்கள் சித்தரிக்கின்றன. இதனையே தமிழக ஊடகங்களும் பின்பற்றி வருகின்றன. ஆனால் தீக்கதிர் மட்டுமே போர்களுக்குப் பின்னால் உள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் லாபநோக்கங்களை அம்பலப்படுத்துகிறது. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் தோல்வியால் உலகப் பொருளாதாரம் சீரழிந்து வரும் நிலையில், உலக கவனத்தை போர்களின் பக்கம் திருப்பி, உலகத்தை சிதைக்கும் ஏகாதிபத்திய சதிகளை வெளிச்சமிடுகிறது.
ஊடகச் சுதந்திரமும் தீக்கதிரின் பணியும்
மோடியின் ஆட்சியில் இந்தியாவின் ஊடகச் சுதந்திரம் 180 நாடுகளில் 159வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் மோடி அரசின் அடக்குமுறைகள் தொடர்கின்றன. இந்தியாவின் பல முன்னணி செய்தி நிறுவனங்களை பாஜக கட்டுப்படுத்தி வருகிறது. என்டிடிவி உள்ளிட்ட பிரதான ஊடகங்களை மோடியின் நண்பர் அதானி கையகப்படுத்தியுள்ளார். ஒருபுறம் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், மறுபுறம் பத்திரிக்கை நிறுவனங்களையும், பத்திரிக்கையாளர்களையும் விலைக்கு வாங்கி வளைத்து போடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இத்தகைய சூழலில் தீக்கதிர் நாளேடும் டிஜிட்டல் பதிப்பும் உயர்ந்த மலையில் பிரகாசிக்கும் ஒளி விளக்காக தனித்து நின்று வர்க்கப் போராட்டத்திற்கான குரலை உயர்த்துகின்றன. சமரசமற்ற வர்க்கப் போராட்டம் கடந்த மாநாட்டு முடிவுகளின்படி பாஜகவை தனிமைப்படுத்தி வீழ்த்தும் கடமையின் பிரதான பணியான கருத்தியல் பிரச்சாரத்தை, எந்த பண பலமும் இன்றி தோழர்களின் உழைப்பாலும் தியாகங்களாலும் தினந்தோறும் முன்னெடுக்கிறது. கார்ப்பரேட் மதவாத கூட்டணி மூலம் மோடியின் ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் அதானி-அம்பானி அடிக்கும் கொள்ளைகளை தினந்தோறும் அம்பலப்படுத்துகிறது. இந்த கருத்தியல் பிரச்சாரம் நமது தோழர்கள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் பாஜகவை எதிர்ப்பதற்கான கருத்தியல் பலத்தை வழங்கியுள்ளது. இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைத்த நேரடி அனுபவமாகும். தமிழக அரசு தொழிலாளர் நலனுக்கு எதிரான முடிவுகளை எடுக்கும்போது எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. 12 மணி நேர வேலை சட்டம், சாம்சங் தொழிலாளர் போராட்டம், சமூக நீதி மீறல்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களின் பக்கம் நின்று வலுவான எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது தீக்கதிர்.
தொழிலாளர் உரிமைப் பாதுகாப்பு
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் சாதிய வன்கொடுமைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை அம்பலப்படுத்துவதோடு, அரசு மற்றும் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்க வைக்கும் பணியையும் செய்கிறது. மக்களை அணிதிரட்டி வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துகிறது. சர்வதேச கவனத்தை ஈர்த்த சாம்சங் போராட்டத்தில், உண்மைக்கு புறம்பாக ஆளும் வர்க்கம் நினைப்பதை மட்டுமே செய்தியாக்கி மக்களைக் குழப்பிய போது, தொழிலாளர்களின் பக்கம் உள்ள நியாயத்தை துளியளவும் சமரசம் இன்றி பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தது. பெரும்பான்மை ஊடகங்கள் தொழிலாளர்களை கைவிட்ட நிலையில், அடிமைப்பட்டு கிடந்த மனிதர்களின் விடுதலைக்காக அவர்களை பெரும்படையாக வழிநடத்தி சென்ற ஸ்பார்ட்டகஸ் போல தொழிலாளர்களின் முன் நின்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியது தீக்கதிர். இன்று வரை பாதிக்கப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர்கள் உரிமையை உறுதி செய்யும் போராட்டத்தில் அவர்களுடன் பயணித்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன தலைவர்களின் கையெழுத்தில் கருத்தியல் போராட்டத்தை துவங்கிய நமது ஏடு இன்று 60 ஆண்டு காலத்தை கடந்து மார்க்சிய அடிப்படையில் அரசியல், பொருளாதார, கலாச்சார, தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு கருத்தியல் போராட்டத்தை ஏந்தி தோழர்களின் கைகளோடும் கருத்துக்களோடும் இணைந்து 24 ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்கிறது. இந்த உற்சாகத்தோடு தமிழ்நாட்டில் கருத்தியல் போராட்டத்தை மேலும் உறுதியாக தீக்கதிர் முன்னெடுக்கும். தமிழ் நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிடுவோம்!