1992 ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதையொட்டி முந்தைய 13 மாநாடுகளைப் பற்றி கட்சியின் மகத்தான தலைவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எழுதிய கட்டுரை தொடர், தீக்கதிரில் “சோசலிசத்திற்கான இந்தியப் பாதை” என்ற தலைப்பின்கீழ் வரிசையாக வெளியானது. அதே வரிசையில் தற்போது இங்கு இடம்பெறுகிறது.
1947 ஆகஸ்ட் 15இல் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் நிர்வாகிகள் என்ற புதிய பொறுப்பை ஏற்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு வெளியானதும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அதைப் பரிசீலித்து தனது அணுகுமுறையை வகுத்தது. மத்தியக் குழு தீர்மானத்தின் சாரம் என்னவெனில், தேச சுதந்திரம் ஒரு யதார்த்தமான நிலையாகி விட்டதால் கட்சி தன் சக்தி முழுமையையும் செலுத்தி, மக்களின் கோரிக்கைகள் நிறைவேறிட சுதந்திரத்தைப் பயன்படுத்த முயல வேண்டும் என்பதேயாகும். மத்தியக் குழுவிற்குள்ளேயே ஒரு வலுவான பிரிவு இதில் மாறுபட்டது. இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது உண்மையான சுதந்திரம் அல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் அதி காரப்பூர்வமாக ஆட்சியதிகாரத்தைக் கை விட்டாலும்கூட நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் உதவியோடு மறைமுகமாக ஆட்சியில் நீடிக்கவே செய்கிறார்கள் என அந்தப் பிரிவு மதிப்பிட்டது. அத்தகைய நிலை மையில், புதிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அமைப்புகளை உருவாக்குகிற தொலைநோக்குடன் ஒரு புரட்சிகர சக்தியாக கட்சி செயல்பட வேண்டும் என அந்தப் பிரிவினர் வாதிட்டனர்.
இரண்டாவது மாநாட்டின் பின்னணிகள்
கல்கத்தாவில் 1948இல் கூடிய இரண்டா வது அகில இந்திய மாநாட்டில் இந்த தத்து வார்த்தப் போராட்டம் தொடர்ந்தது. அதற்கு முன் சுமார் ஆறு வாரங்களாக இந்தப் போராட்டம் நடந்து வந்தது. பாசிச எதிர்ப்பு யுத்தம் 1945இல் முடிவடைந்த தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தலை மையில் ஒரு பனிப்போர் ( சோசலிச சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான கெடுபிடி யுத்தம்) துவக்கப்பட்டிருந்த பின்னணியில் இரண்டா வது மாநாடு கூடியது. குறிப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சோவியத் யூனி யனும் இதர சோசலிச நாடுகளும் ஒரு உறுதி யான நிலையை எடுத்திருந்தன. உலக கம்யூ னிஸ்ட் தலைவர்களிடையே ஒரு பிரிவினர் இதில் மாறுபட்ட நிலையை எடுத்தனர். பாசிச எதிர்ப்பு யுத்தத்தில் சோசலிசம் மகத்தான வெற்றியினை ஈட்டியுள்ள நிலை மையில், யுத்தத்தின்போது உருவாக்கப்பட்ட ஒற்றுமையைத் தொடர வேண்டும் என்றும் அதற்காக நெளிவுசுழிவான நடைமுறை களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அந்தப் பிரிவினர் வாதிட்டனர். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏர்ல் பிரௌடர் அங்கு கட்சியை கலைத்து விடவும் முடிவு செய்தார். இது அப்பட்டமான திருத்தல்வாதம் எனக் கூறி, இந்தப் போக்கிற்கு எதிராக ஒரு இயக்கம் தோன்றியது. சோவியத் கட்சி உள்ளிட்ட ஒன்பது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு மாநாட்டில் கூடி திருத்தல்வாதத்திற்கு எதிரான ஒரு தத்துவார்த்தப் போராட்டத்தை ஆரம்பித்தன. அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல கம்யூனிஸ்ட் தகவல் மையம் (Communist Information Bureau) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த மையத்தின் சார்பில் சர்வதேச பத்திரிகை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. அந்த அமைப்பும் அதன் பத்திரிகையும் 1943இல் கலைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அகிலத்தின் தொடர்ச்சியேயாகும்.
இந்த நிகழ்ச்சிப் போக்குகளின் தாக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டு நடைமுறைகளில் பிரதானமாக இருந்தது. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் போலவே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் கூட திருத்தல்வாதத்திற்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. கட்சியின் பொதுச்செயலாளரான பி.சி. ஜோஷி அதன் பிரதிநிதியாகவும் அமைப்பாளராகவும் செயல் பட்டார் என குற்றம்சாட்டப்பட்டது. இந்திய கட்சியில், 1942ஆம் ஆண்டிலிருந்து எவ்வாறு பல வடிவங்களில் ‘திருத்தல்வாதம்’ தலை தூக்கியது என விளக்கமளிக்கும் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்ப டையில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மட்டுமல்லாமல் மத்தியக் குழுவிலிருந்தும் ஜோஷி நீக்கப்பட்டார். கட்சியின் இந்தப் புதிய கொள்கை நிலையை முன்மொழிந்த பி. டி. ரணதிவே பொதுச் செயலாளராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டார். ஜோஷியின் கொள்கையை நடைமுறைப் படுத்துவதில் முன்னணிப் பாத்திரம் வகித்த மற்றவர்கள் மத்தியக் குழுவிலிருந்து வெளி யேறவில்லை என்றாலும், அவர்கள் கடு மையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப் பட்டனர். (அவர்களில் இந்தக் கட்டுரை யாளரும் ஒருவர்). இதனாலும், பி.டி.ரணதிவே தேர்ந்தெடுக்க ப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாலும் இரண்டாவது மாநாடும் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலை மையும் “தனிக்குழுவாதத்தன்மை” (Sectarian) கொண்டதாகக் குறிப்பிடப்பட்டது. அது உண்மையும்கூட. எனினும், நாட்டின் ஆளும் கட்சியாக மாறிய காங்கிரசுக்கு எதி ராக மக்களை அணிதிரட்டும் பணியை மேற் கொண்ட முதல் எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியிருந்த நிலைமையில் இரண்டாவது அகில இந்திய மாநாடு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
“தெலுங்கானா பாதை”
1942-45 கால கட்டத்தில் காங்கிரஸ் கொள்கையை எதிர்த்த கம்யூனிஸ்ட் கட்சி இப்போது அநேகமாக ஒவ்வொரு நட வடிக்கையிலும் காங்கிரசை எதிர்க்கிற ஒரு எதிர்க்கட்சியாகியது. விரைவிலேயே வேறு பல கட்சிகளும் பிரிவுகளும் எதிர்க்கட்சி களாக உருவாகின என்றபோதிலும் அவை அனைத்தும் நாடாளுமன்ற நடவடிக்கை களுக்கு உள்ளேயே சுருங்கிக் கொண்டன. இதற்கு மாறாக, கம்யூனிஸ்ட் கட்சி, தொழி லாளர் வேலை நிறுத்தங்களையும் தெலுங்கானா போராட்டம் என்ற விவசாயிகள் போராட்டங்களையும் நடத்தி ஆட்சியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற முயன்று கொண்டி ருந்தது. தெலுங்கானாவில் நிஜாம் ஆட்சி அகற்றப்பட்டதைப் போல இந்தியாவிலிருந்து காங்கிரஸ் ஆட்சியை அகற்றிவிடலாம் என்பது இரண்டாவது மாநாட்டின் பார்வை யாக இருந்தது. மாநாட்டு அரங்கில், “நமது பாதை தெலுங்கானா பாதை” என்ற கோஷம் எழுந்தது. பின்னர் இது முற்றிலும் தவறு என கட்சி உணர்ந்தது. ஆனால், இந்தியாவின் முதல் பிரதான எதிர்க்கட்சி என்ற தகுதியைப் பெற முடிந்தது என்பது பெருமைக்குரிய விஷயமே. எனினும், இரண்டாவது மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியக் குழு இரண்டே ஆண்டுகளில் மாற்றப்பட்டது. 1948 மார்ச் மாதத்துக்கும் 1950 ஜனவரிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட நடைமுறை செயல்பாடு களும் ஸ்தாபன நடவடிக்கைகளும் கட்சிக்குள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டன. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விமர்சனத்துக்கும் உள்ளாகின. கம்யூனிஸ்ட் தகவல் மையத்தின் (கோமின் ஃபார்ம்) அதிகாரப்பூர்வ ஏட்டில் இந்திய நிலைமைகள் குறித்து ஒரு தலையங்கம் வெளியானது.
அந்தத் தலையங்கம் தந்த வெளிச்சத்தில் அனைத்து நிகழ்ச்சிப் போக்குகளையும் விவாதிப்பதற்காக மத்தியக் குழுவின் முழுமையான சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. கட்சி தன்னை சுயவிமர்சனம் செய்து கொண்டு பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பி.டி.ரணதிவேயை மாற்றியது. அவர் உள்ளிட்ட ஐந்து மத்தியக்குழு உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். அவர்களது செயல்பாடுகளைப் பற்றி பரிசீலிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டது. தெலுங்கானா போராட்டத்தின் ஒரு முன்னணி தலைவரான சி.ராஜேஸ்வரராவ் பொதுச்செயலாளராகவும் பி.சுந்தரய்யா, எம். பசவபுன்னையா மற்றும் ஆந்திரா வின் வேறு சில தோழர்களை உறுப்பினர் களாகவும் கொண்ட ஒரு புதிய மத்தியக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மத்தியக் குழு ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. பி.டி.ரணதிவே தலைமை போன்றே இந்த தலைமையும் தனிக்குழு வாதத்தன்மை கொண்டதாக முத்திரை குத்தப்பட்டது.
ஸ்டாலினுடன் ஆலோசனை
மேற்கண்ட இரண்டுவிதமான தனிமை வாதப் போக்குகளுக்கும் எதிராக ஒரு புதிய மத்தியக் குழுவும் அரசியல் தலைமைக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதன் செயற்குழு அமைப்பாளராக அஜாய் கோஷ் முடிவு செய்யப்பட்டார். இவ்வாறாக, இரண்டாவது மாநாடு நடந்த மூன்றாண்டுகளுக்குள்ளாக பொதுச் செயலாளர் பொறுப்பில் மூன்று மாறுபட்ட தோழர்கள் கொண்டுவரப்பட்டனர். அத்தகைய ஒரு குறுகிய கால இடைவெளி யில் இவ்வளவு வேகமான மாற்றங்கள் கட்சியில் அதற்கு முன்பும் நடந்ததில்லை. பின்பும் நடந்ததில்லை. இத்தனைக்கும் பிறகு கட்சிக்குள் தத்து வார்த்த குழப்பம் நீடித்தது. நடப்பு நிலைமை கள் மற்றும் பணிகள் மட்டுமின்றி, இந்தியப் புரட்சியின் தொலைநோக்கு பற்றிய அடிப் படையான கேள்வி தொடர்பாகவும் கடுமை யான கருத்து வேறுபாடுகள் தோன்றின. இங்குள்ள தோழர்களுக்கிடையே மட்டும் விவாதம் நடத்துவதால் அந்த வேறுபாடு களுக்குத் தீர்வுகாண முடியாது என அனைவரும் முடிவுக்கு வந்தனர். எனவே தத்துவார்த்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதற்காக, சோவியத் கட்சியின் உதவி நாடப்பட்டது. இந்தியக் கட்சியின் பிரதிநிதிக் குழு ஒன்றை மாஸ்கோவுக்கு வருமாறு சோவியத் கட்சி அழைத்தது. இந்திய கட்சியின் பிரதிநிதிகளாக அஜாய் கோஷ், எஸ். ஏ. டாங்கே, எம்.பசவபுன்னை யா, சி.ராஜேஸ்வரராவ் ஆகியோர் சென்றனர். அவர்களுக்கும் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் கட்சியின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையே விரிவான விவாதம் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்தியப் புரட்சியின் அடிப்படைப் பிரச்ச னைகள் தொடர்பாக இரண்டு ஆவணங்கள் தயாராகின - ஒன்று கட்சித் திட்டம். இன்னொன்று கொள்கை அறிக்கை.
இரண்டு ஆவணங்கள்
அந்த ஆவணங்களைத் தயாரிப்பதற்கு முன்னதாக, சோவியத் கட்சியின் பிரதிநிதிக் குழு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியது. அதாவது, தங்களுக்கு மார்க்சிய-லெனினிய அடிப்படைக் கொள்கைகள் தெரியும் என்றா லும் கூட, இந்திய நிலைமைகள் பற்றித் தம்மிடம் எவ்விதத் தகவலும் இல்லை என சோவியத் குழு கூறியது. தம்முடைய உதவி யோடு தயாரிக்கப்படவுள்ள இரண்டு ஆவ ணங்களையும் ஏற்பதோ, நிராகரிப்பதோ, திருத்தியமைப்பதோ இந்திய தோழர்களின் பொறுப்புதான். எனவே, மாஸ்கோவில் தயாரிக்கப்படும் இரண்டு ஆவணங்களும், இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள தோழர்களால் விவாதிக்கப்பட்ட பிறகு தேவையான திருத்தங்களுடன் அவற்றை அங்கீகரிக்கலாம் என்று சோவியத் குழு கூறியது. இந்த நிபந்தனைக்கு உட்பட்டதாக கட்சித் திட்டம், கொள்கை அறிக்கை என்ற இரண்டு ஆவணங்களும் மாஸ்கோவில் தயாரிக்கப்பட்டன. பிரதிநிதித் தோழர்கள் இந்தியா திரும்பியவுடன் கட்சியின் சிறப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. நூற்றுக்கும் குறைவான பிரதிநிதிகளுடன் ரகசியமாகக் கூடிய அந்த மாநாடு, அந்த இரண்டு ஆவ ணங்களையும் சில சிறிய மாறுதல்களோடு அங்கீகரித்தது. இந்த கட்டுரைத் தொடரின் அடுத்த கட்டுரையில் அந்த இரு ஆவணங்களின் விவரங்கள் பற்றிக் கூறப்படும். அதற்கு முன்னதாக இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.
இந்திய தோழர்களின் பொறுப்பு
முதலாவதாக 1943இல் கம்யூனிஸ்ட் அகிலம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய (கம்யூனிஸ்ட்) தலைவர்களிடையே ஏற்படும் குறிப்பான மற்றும் எல்லா கருத்து வேறுபாடுகளையும் அவர்களுக்குள்ளேயே விவாதம் நடத்தி, ஏகமனதாகவோ அல்லது பெரும்பான்மைக் கருத்தின் அடிப்படையிலோ தான் முடிவு காணப்படவேண்டும் என்ற நிலைமை இருந்தது. இரண்டாவதாக, இந்திய தோழர்கள் 1917இன் அக்டோபர் புரட்சியையோ அல்லது 1949இன் சீனப் புரட்சியையோ தமது முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது; இந்திய நிலைமைகள் பற்றிய ஒரு திட்டவட்டமான ஆய்வு மற்றும் மதிப்பீட்டின் மூலமாகத்தான் சரியான முடிவுகளுக்கு அவர்கள் வர வேண்டும். இரண்டாவது வழிகாட்டுதல் பற்றி ஒரு விளக்கம் தேவைப்படுகிறது. இரண்டாவது மாநாட்டில் “நமது பாதை தெலுங்கானா பாதை” என்ற கோஷம் ஒலித்தது. அந்தப் பாதையில் செல்வது தொடர்பான விவரங் களில் ஒரு முரண்பாடு ஏற்பட்டது.
எது சரியான பாதை?
கட்சித் தலைமையில் ஒரு பகுதியினர் ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்ட தொழி லாளர்களைக் கொண்டு ஜார் காலத்து ரஷ்யா வில் நடந்தது போல இந்திய நகரங்களில் ஆயுதக் கிளர்ச்சிகளை நடத்தி ஆட்சி அதி காரத்தைப் பிடித்து விடலாம் எனத் திட்ட மிட்டனர். (அவர்களில் முக்கியமானவர் பி.டி.ரணதிவே.) இன்னொரு பக்கத்தில், தெலுங்கானா போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஆந்திரா தோழர்கள் தெலுங்கானா பாதை யென்றால் சீனாவைப் போல கிராமப்புற ஏழை களைத் திரட்டி, கொரில்லாப் போராட்டங்களை நடத்தி, நகரங்களைப் பிடிப்பதுதான் என்று வாதிட்டனர். இந்த இரண்டு வழிகளில் எது சரியான வழி என்ற பிரச்சனை மாஸ்கோ விவாதத்தில் முன்னுக்கு வந்தது. அதற்கு ஸ்டாலின், இந்தியப் புரட்சி சோவியத்தையோ சீனா வையோ முன் மாதிரியாகக் கொண்டு பின்பற்றக் கூடாது. அது தனது சொந்தப் பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும் என பதிலளித்தார். அதற்கான வழிகாட்டுதல்களே கட்சித் திட்டமும் கொள்கை அறிக்கையும்! இந்தியப் பாதைக்கான தேடல் கடந்த நாற்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆகவேதான், இந்த தொடரின் தலைப்பே “சோசலிசத்துக்கான இந்தியப் பாதை” என்று தரப்பட்டுள்ளது.