கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டம் - ஜி.ராமகிருஷ்ணன்,
கேள்வி: நவீன தாராளமயக் கொள்கையின் தாக்கத்தினால் சமூக பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், வர்க்கங்களின் நிலைபாட்டையும் ஆய்வு செய்த 3 ஆய்வுக்குழுக்களின் அறிக்கைகள் பற்றி 24வது அகில இந்திய மாநாட்டில் விவாதிக்க இருக்கிற வரைவு தீர்மானங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கும் நமது கட்சியின் அன்றாட வேலைகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
பதில் : மத்தியக்குழு வெளியி
தில் : மத்தியக்குழு வெளியிட்டுள்ள வரைவு அரசியல் பரிசீலனை அறிக்கை கடந்த 3 ஆண்டுகளில் பெருமளவிற்கு வர்க்க, வெகுஜன போராட்டங்களை நம்மால் வளர்த்தெடுக்க முடியவில்லையே, ஏன் - என்ற கேள்வியை எழுப்பி அதற்கான காரணங்களையும் சுட்டிக்காட்டியதோடு எதிர்காலத்தில் வர்க்கப் போராட்டங்களை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்தினால் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்திட மத்தியக்குழு அமைத்த 3 குழுக்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது; எவ்வாறு தொழிலாளர்கள் விவசாயிகளின் வர்க்கப் போராட்டத்தை மேற்கொள்வது என்பது பற்றியெல்லாம் 3 ஆய்வறிக்கைகள் விளக்கியுள்ளது. அதன் அடிப்படையில்தான் வரைவு அரசியல் பரிசீலனை அறிக்கையும், வரைவு அரசியல் தீர்மானமும் எதிர்கால கடமைகளை தீர்மானித்துள்ளது. கிராமப்புற இந்தியா இந்தியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதம் (2015ல்) பேர் ஊரகப் பகுதிகளில் வாழ்கிறார்கள். விவசாயிகள் ஒரே வர்க்கமாக இல்லை. பன்முகத் தன்மை கொண்டவர்களாகப் பல வகையாகப் பிரிந்து சமூக, பொருளாதார வர்க்கங்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
நிலப்பிரபுக்கள் - முதலாளித்துவ பெருவிவசாயிகள் நடுத்தர விவசாயிகள், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஊரக உடலுழைப்புத் தொழிலாளர்கள் என பல வர்க்கங்களையும் உள்ளடக்கியது தான் இன்றைய கிராமப்புற இந்தியா. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமலாக்கப்பட்டு வரும் நவதாராளமய பொருளாதாரக் கொள்கை, ஊரகப் பகுதிகளில் அதிவேகமான -சிக்கலான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நிலப்பிரபுக்கள் - முதலாளித்துவ பெருவிவசாயிகள் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நவதாராளமயக் கொள்கையினால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.அதே நேரத்தில், கிராமங்களில் நிலப்பிரபுக்களும் - முதலாளித்துவ பெரு விவசாயி குடும்பங்களும் ஆளும் வர்க்கமாக உள்ளனர். இவர்கள்தான் கிராமப்புறத்தில் அரசு அதிகாரத்தை பிரதானமாக முன்னிலைப்படுத்தும் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். கிராமங்களில் உள்ள வளமான நிலங்கள் இவர்களது உடைமையாக உள்ளன. நிலப்பிரபுக்கள் - முதலாளித்துவ பெருவிவசாயிகள் உருவான பின்னணியில் வேறுபாடு இருந்தாலும், சொத்துக் குவிப்பதிலும், உபரியை அபகரிப்பதிலும் நவதாராளமயக் கொள்கைகளால் பலனடைந்துள்ளனர். கிராமப்புற இந்தியாவில் இவர்கள் தான் அரசாட்சியின் ஒன்றிணைந்த ஒரே தூணாக இருக்கிறார்கள். இவர்கள்தான் அரசின் விவசாயக் கொள்கைகளின் பயனாளிகளாகவும் இருக்கிறார்கள். சம்பளத்துடனான வேலை வாய்ப்புக்கள், வணிகம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பிற தொழில்கள் உள்ளிட்ட பல வகைகளில் சம்பாதித்து அவற்றை கிராமத்தில் முதலீடு செய்கிறார்கள்.
கிராமங்களில் இவர்களுடைய ஆதிக்கம் நிலத்தை மையப்படுத்தியதாக மட்டும் இல்லை. செல்வம் கொழிக்கும் பிற தொழில்களிலும் ஈடுபடுகிறார்கள். வட்டிக்கு விடுவது, அரவை ஆலைகள், பால் பண்ணைத் தொழில் ஆகியவற்றுடன் தானிய விவசாயம், தோட்டப்பயிர்கள், வேளாண் இயந்திரங்களின் விற்பனை - வாடகை, உதிரி பாக உற்பத்தி, பட்டு ஆகிய சரக்குகளின் வர்த்தகம், ஊக வணிகம், ரியல் எஸ்டேட், கட்டுமானம், சினிமா திரையரங்குகள், பெட்ரோல் பம்புகள், தங்கும் விடுதிகள், போக்குவரத்து வசதிகள், கல்வி நிறுவனங்கள் நடத்துவது போன்றவை அவர்களுடைய வருமானத்திற்கும், அதிகாரத்திற்கும் மூலாதாரங்களாக உள்ளன. இத்தகைய குடும்பங்கள் உள்ளாட்சி அமைப்புகளிலும், அதற்குமேல் சட்டமன்றங்கள், அதிகார வர்க்க வட்டங்கள், காவல்துறை மற்றும் அரசுத் துறைகளில் நுழைவதற்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். உயர்கல்வி, நவீன முறைசார்ந்த வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களே முதலாளித்துவ கட்சிகளின் நிர்வாகப் பொறுப்புகளிலும் உள்ளார்கள். இந்த வர்க்கம் தான் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளுடைய கிராமப்புற அதிகாரத்தின் மையத் தூணாக உள்ளது. கிராமங்களின் வாக்குகளை பெற்றுத் தருவதற்காக கட்சிகளால் நாடப்படும் வர்க்கமாகவும் இது அமைந்துள்ளது.
மேற்கண்ட ஆய்வறிக்கையின் முடிவின் அடிப்படையில் வரைவு அரசியல் பரிசீலனை அறிக்கை கிராமப்புற பகுதிகளில் இரண்டு முரண்பாடுகள் நிலவுவதாக கூறுகிறது. முதல் முரண்பாடு : “ஆளும் வர்க்கங்களின் ஒரு பகுதியான கிராமப்புற செல்வந்தர்களின் கூட்டுக்கும், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், விவசாயம் மற்றும் இதர துறைகளில் ஈடுபட்டு வரும் கிராமப்புற உடலுழைப்புத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய கிராமப்புற ஏழைகளுக்கும் இடையிலான முரண்பாடு ஆகும்”(பாரா 18 - வரைவு அரசியல் பரிசீலனை அறிக்கை) மேற்கண்ட நிலைமை எல்லா கிராமங்களிலும் இருக்காது. அத்தகைய நிலைமை உள்ள கிராமங்களில் மேற்கண்ட நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ பெருவிவசாயி வர்க்கத்தால் சுரண்டப்படுகிற ஒடுக்குமுறைக்கு ஆளாகிற இதர கிராமப்புற மக்களை - விவசாயிகள், ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கிராமப்புற உடலுழைப்பு தொழிலாளர்கள் எனஅனைவரையும் திரட்டி வலுவான வர்க்கப் போராட்டம் நடத்துவதன் மூலமே நமது கட்சியின் சொந்த பலத்தை அதிகரிக்க முடியும் என நகல் அறிக்கை கூறுகிறது. இரண்டாவது முரண்பாடு : “நவதாராளமயக் காலக்கட்டத்தில் இந்த முரண்பாடு ஒருபுறம் கார்ப்பரேட்டுகள் - அரசுக் கொள்கைகளுக்கும்; மறுபுறம் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இடையிலான மோதலாக வெளிப்படுகிறது. இங்கே மற்றோரு மோதலும் நிலவுகிறது; அது என்னவெனில், அரசின் சில கொள்கைகள், கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக முதலாளித்துவ விவசாயிகளுக்கும் நிலப்பிரபுத்துவ சக்திகளில் ஒரு பிரிவினருக்கும் இடையிலான மோதல் ஆகும். இது ஆளும் வர்க்கங்களின் பல்வேறு பிரிவுகளுக்குள் நிகழும் மோதல் முரண்களின் பிரதிபலிப்பே ஆகும். இத்தகைய மோதல்கள் அரசு ஆதரவுடன் வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்தல், நிலப்பறிப்பு ஆகியவற்றுக்கு எதிரான வலுவான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளை விவசாய இயக்கத்திற்கு வழங்குகின்றன. ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டமும், குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் நிவாரணம், பயிர் காப்பீட்டு முறையை சீரமைத்தல், குறைந்த உள்ளீட்டு செலவுகள் போன்ற பலவற்றுக்கும் சட்ட அடிப்படையிலான நடவடிக்கை கோரி தற்போது நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டமும் இந்த வகையில்தான் அடங்கும்” (பாரா 18 - வரைவு அரசியல் பரிசீலனை அறிக்கை). கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டங்களை நடத்துவதற்கு மூன்று ஆய்வுக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய பணியைத் தொடர்ந்து, கீழ்மட்டத்தில் திட்டவட்டமான ஆய்வை மேற்கொண்டு முதல் முரண்பாடு உள்ள கிராமங்களை தேர்வு செய்து வலுவான வர்க்கப் போராட்டத்திற்கு திட்டமிட வேண்டுமென்றும், இரண்டாவது முரண்பாடு முன்னுக்கு வருகிறபோது அரசுக் கொள்கைகளுக்கு எதிராகவும், கிராமப்புற மக்களை திரட்டி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று வரைவு அறிக்கை வலியுறுத்துகிறது.