கிராமத்துக் கிணற்றில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு தண்ணீர் எடுக்க வந்த ஒரு பெண்ணிடம் அந்த வழியாக வந்த ஒரு புத்தத் துறவி, குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்கிறான். தாழ்ந்த சாதியில் பிறந்த கிராமத்து பெண், தகதகக்கும் மேனி கொண்ட அந்த புத்தத் துறவியிடம் தான் தண்ணீர் தந்தால் அது தப்பாகி விடுமே என்று தயங்குகிறாள். “எனக்கு தாகமாயிருக்கிறது, குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கம்மா” என்று அவர் கேட்க, இவளோ, “என்னாயிற்று உங்க ளுக்கு, ரொம்ப சோர்ந்து போயிருப்பதால் சாதி மறந்திட்டீங்களோ? நீசமான, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த என் கையால் தண்ணீர் வாங்கி குடிக்கலாகுமோ புகழ்பெற்ற ஆரியன்மார்?” இப்படி நடக்கிறது ஓர் உரையாடல், ஒடுக்கப்பட்ட சாதி பெண் ஒருத்திக்கும், அந்த வழியே வந்த ஒரு புத்தத் துறவிக்கும்
சமூக சீர்திருத்த கவிதைகள் எழுதிய கேரளாவை சேர்ந்த மகாகவி குமரன் ஆசான் அவர்களது புகழ் பெற்ற சண்டாள பிட்சுகி (தீண்டத் தகாத துறவி) எனும் கவிதை சொல்லும் கதை தான் இது. குமரன் ஆசான், கேரளத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் காயிக்கரா என்ற இடத்தில் 1873இல் ஈழவ சமூகத்தில் பிறந்தவர். மிகப் புகழ் பெற்ற சமூக சீர்திருத்தவாதி நாராயண குருவின் சீடராவார். தனது அபார கவிதை ஆற்றலால் வீண பூவு, துரவஸ்தா, லீலா, நளினி, பிரரோதனம், சிந்தாவிஷ்டாய சீதா, சண்டாள பிட்சுகி உள்ளிட்ட ஆகச் சிறந்த இலக்கி யங்கள் படைத்தவர். ‘மனிதத் தன்மையின் சிறகுகள் விரித்த மகாகவி குமரன் ஆசான்,’ என்று வருணித்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். மனிதத்துவ ஒளியைப் பரவலாக எடுத்துச் சென்றவர் என்றும் விவரித்தார். தீண்டாமை ஒவ்வொரு சாதிக்கும் இத்தனை அடி தூரம் என்று கணக்கு போட்டு மனிதனை சாதி அடிப்படையில் கொடுமைப்படுத்திய படுமோசமான காலமொன்று இருந்தது கேரளத்தில். சில வகுப்பாருக்குக் கல்வி கற்க அனுமதி இல்லை; நியாயம் கேட்க யாரும் இல்லை; என்ற காலத்தில் தான் அய்யா வைகுண்ட சாமி, அய்யங்காளி, ஸ்ரீநாராயண குரு, சட்டம்பி சாமிகள் ஆகியோர் தீண்டாமைக்கெதிராகவும் கல்வி கற்கும் உரிமைகளுக் காகவும், சம உரிமைக்கும், மேலாடை அணிவதற்கும், போராட்டங்கள் நடத்தினர்.
இந்த போராட்டங்களுக்குத் துணையாக நின்ற டாக்டர் பத்மநாபன் பல்பு அவர்களின் யோசனையில் ஸ்ரீநாராயணகுரு ஆரம்பித்த ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சங்கத்தின் (எஸ் என் டி பி) முதல் செயலாளராக மகாகவி குமாரன் ஆசான் சேவை செய்தார். நாராயண குருவின் முக்கிய சீடராக நம்பிக்கைக்குரியவராக குமாரன் ஆசான் செயல்பட்டார். இந்தப் பொறுப்புகள் குமாரன் ஆசானில் புது சிந்தனைகளை உரு வாக்கியுள்ளது. இருண்ட உலகமாகக் கிடந்த கேரளாவிலிருந்து உயர் படிப்பிற்கு கொல்கத்தா போன குமாரன் ஆசான் புதிய வெளிச்சம், புதிய பார்வை பெற்று சாதிக் கொடுமைகள் இல்லாமல் மக்கள் கல்வி பயில வேண்டும், தீண்டாமை மனித குலத்திற்கு ஒரு சாபம், மனிதர்கள் அனைவரும் ஒன்றே போன்ற சிந்தனைகளைத் தன்னுடைய கவிதைகளில் வடித்துக் காட்டினார். அப்படியான புது சிந்தனையுள்ள ஓர் கவிதை தான் சண்டாள பிட்சுகி.
தனக்குத் தண்ணீர் தரத் தயங்கும் பெண்ணிடம் புத்தத் துறவி சொல்லலானார்: “நான் உன்னிடம் சாதி என்ன? என்று கேட்கவில்லை சகோதரி, என்னுடைய நாக்கு வறண்டு போயுள்ளது. நீ அஞ்ச வேண்டியதில்லை. தயவு செய்து தண்ணீர் தா” அவரது நிலைக்கு இரங்கித் தண்ணீர் கொடுக்கும் அந்த கிராமத்து பெண், சிறிது காலம் சென்றபின் அந்தத் துறவியின் ஆசிரமத்திற்குச் செல்கிறாள்.. அங்கேயே துறவிகளுக்குப் பணிவிடைகள் செய்து வசித்து வரலானாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, ‘இந்த பெண் தாழ்ந்த சாதியில் பிறந்தவள், உயர்ந்த சாதியினர் கூட சமமாக வாழ்கிறாள்’ என்று புகார் எழுந்தது. பெரிய பிரச்சனையாக வளர்ந்து அந்த நாட்டு மன்னன் காதுக்கு எட்டுகிறது. மன்னன், ஆசிரமத்தின் தலைமைத் துறவியுடன் இந்த விஷயத்தின் மீது ஒரு பேச்சுவார்த்தை நடத்த வருகிறான். ஆசிரமத்தின் தலைமைத் துறவி மன்னனைக் கேட்பது போல் அந்த நாட்டு மக்களுக்குமாக சேர்த்துச் சில கேள்விகள் எழுப்பினார்:
“உயர் சாதியினர் பிறக்கும்போதே நாமத்தோடும் பூணூலோடும் பிறந்த னரா..... சண்டாளப் பெண்ணின் உடல் என்ன, உயர்ந்த சாதி ஆண்க ளின் விந்து ஏற்று குழந்தை பிரசவிக்காதா? அனைத்து உயிரினங்களும் பிறந்ததற்குப் பிறகு இங்கு பிறந்த மனிதர்களும் இதே இயற்கையில் தானே வளர்கின்றனர்? அப்புறம் எப்படி சாதி வேறுபாடு வரும்? நெல் பயிருக்குக் கீழே வளரும் காட்டுப் புல் அல்ல தாழ்ந்த சாதி மக்கள். நேற்று செய்த ஒரு தவறு முட்டாள்களுக்கு இன்று ஓர் ஆசாரம் ஆகலாம், நாளை அது சாத்திரம் ஆகிவிடலாம். அதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு நிற்காதே மன்னனே!” ஒரு துறவி மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், அறிவுக்குப் பொருந் தாத கொள்கைகளை சுயநலக்காரர்கள் சொல்வதை ஏற்காமல் இருக்கவேண்டும் என்றும் நாட்டை ஆளும் மன்னனுக்கு அறிவுரை சொல்கிறார்.
“அன்பினின்று உதயமாகிறது உலகம்.
அன்பால் மட்டும் வளர்ச்சி அடைகிறது.
அன்புதான் சக்தி, உலகில் அன்புதான் மகிழ்ச்சி, அனைவர்க்கும்”
ஆசிரமத்தின் தலைமைத் துறவியின் இந்த உரை கேட்டதும் அந்த நாட்டு மன்னன் உண்மையை புரிந்துகொண்டு அந்த ஆசிரமத்தில் அந்தப் பெண் எல்லோருக்கும் சமமாக வாழ்வதில் தவறில்லை என்றும், பாரதத்தில் எங்கும் சாதி வேறுபாடு இல்லாமல் வாழ வேண்டும் என்று உத்தர விட்டான் . பத்து சதாப்தம் (1000 ஆண்டுகள்) பாரதத்தில் சாதி வேறுபாடு இல்லாமல் மக்கள் அதற்கு பிறகு வாழ்ந்ததாக கவிதையில் கடைசியில் கவிஞர் குறிப்பிட்டுள்ளார். மகாகவி குமரன் ஆசான் 1924 ஜனவரி 16 அன்று ஒரு படகு விபத்தில் மறைந்தார். 49 ஆண்டுகளே வாழ்ந்த அவர் வழங்கிச் சென்றுள்ள சமூக சீர்திருத்தக் கருத்துகள் அடங்கிய இலக்கிய வளத்தில் முக்கியமானது சண்டாள பிட்சுகி. அந்தக் காலத்து துறவிகள் உண்மை வார்த்தைகளை அரசர்க்கும் மக்களுக்கும் போதித்து நாட்டை நல்ல வழிக்கு நடத்தியதை இந்தக் கவிதை சொல்கிறது. ஆனால், இன்றோ, செல்வாக்கு பெற்ற துறவிகள் சாதி சமய வேறுபாடுகளை நிலை நிறுத்துவதற்கு ஆட்சியாளரோடு சேர்ந்து செயல்படுவதைக் காண்கிறோம். சாதி வேறுபாடுகளும், தீண்டாமைக் கொடுமைகளும் மலிந்துள்ள நாட்டில், இன்று மீண்டும் அனைவரும் படிக்க வேண்டிய கவிதை தான் சண்டாள பிட்சுகி. அதுவும் இந்தக் கவிதையின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பரவலாகக் கொண்டு செல்வோம். சண்டாள பிட்சுகி கவிதை நூற்றாண்டு விழாவை கேரள சாகித்ய அகாடமி, பிப்ரவரி 19 அன்று சென்னை கேரள சமாஜத்தில் கொண்டாட உள்ளது. கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள்,இலக்கியப் போட்டிகள் ஆகியவை நடைபெற உள்ளன.