அயலி, திரைத் தொடரை சிறப்புக் காட்சியாக குடும்பத்துடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த திரையிட லுக்கு இயக்குனர் அழைத்த போது என்ன படம் என்று கேட்டேன். ‘இது 8 எபிசோடுகள் 4 மணி நேரம் கொண்ட தொடர்’ என்றார். 4 மணி நேரம் என்றால் எனக்கே மலைப்பாக உள்ளது, சிறப்புக் காட்சிக்கு வரும் எல்லோருமே பொறுமையுடன் பார்ப்பார்களா என்ற எண்ணத்துடன்தான் சென் றேன். தொடரின் 3 பகுதிகள் முடிந்த பிறகு தேனீர் இடைவேளை விட்டார்கள். 5 பகுதிகள் முடிந்த பிறகு இரவு உணவு இடைவேளை விட்டார்கள். 4 மணி நேரம் படம் விறுவிறுப்பு குறையாமல் கடந்தது. ஒரு சிலரைத் தவிர சிறப்புக் காட்சிக்கு வந்த அனைவருமே இறுதி வரை அரங்கத்தில் இருந்தார்கள்.
சுவாரஸ்யம் குறையாமல்...
4 மணி நேரம் சுவாரஸ்யம் குறையாத படமாக அயலி உருவாக்கப்பட்டதே அதன் முதல் வெற்றி ஆகும். படத்திற்கும் பார்ப்பவர்களுக்கும் இடைவெளியே இல்லாமல் ஒன்றச் செய்ததுதான் வெற்றிக்கு காரணம். கதையை ஒரு வரியில் சொன்னால், பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை எதிர்த்து நடக்கும் போராட்டம் எனலாம். கதையின் களம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீரப்பண்ணை என்ற கிராமம். 30 ஆண்டுகளுக்கு முன்புவரை அங்கு பெண்கள் பருவமடைந்த பிறகு அந்த ஊரில் இருக்கும் ‘அயலி’ என்ற பெண் தெய்வ கோயி லுக்கும் போக முடியாது, பள்ளிக்கு செல்லவும் தடை இருந்தது. இதனால் அந்த கிராமத்தில் எந்தவொரு மாணவியும் பத்தாம் வகுப்பு வரை கூட செல்ல முடியவில்லை.
வயதைப் புறந்தள்ளி ஒரு பெண் மாதவிடாய் அடைந்தாலே உடனடி யாக மஞ்சள் நீர் சடங்கு நடத்தி, பள்ளிக்குச் செல்ல தடை விதிப்பதுடன் திருமணத்தை நடத்தி முடித்துவிடுவார்கள். இது ஊர் கூடி எடுத்த முடிவு. காலம் காலமாக அமலில் உள்ளது. மருத்துவம் படிக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் தமிழ்ச் செல்வி என்ற சிறுமி இதனை எதிர்த்துப் போராடி வெற்றியடைகிறாள். நவீனம் வந்துவிட்டதாக கருதப்பட்ட 1990-களில் கூட பெண்களுக்கு மாதவிடாய் வந்தால் கல்வி மறுக்கப்படுவது என்ற கோர வடிவிலான ஒடுக்குமுறை நிலவியதா என்பது ஒரு கேள்வி யாக இருந்தாலும், இப்போதும் கூட பெண் களுக்கு நாட்டின் பல பகுதிகளில் கல்வி மறுக்கப் படுவது தொடர்கிறது என்பது உண்மைதான். கல்வி கற்க அனுமதித்தாலும் பள்ளிப் படிப்பிற்கு மேல் அனுமதிக்கமாட்டார்கள். தொடக்கத்தில் இருந்து படம் முழுவதுமே பெண் அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா வில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியை உறுதி செய்திட, குறிப்பாக பெண் கல்விக்காக மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்திரி பூலே, ஆகி யோர் நடத்திய போராட்டம் இன்றும் படிக்க வேண்டிய வரலாறு ஆகும். தமிழ் நாட்டில், கதைக் களமாக எடுத்துக்கொள்ளப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்துதான் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி வந்தார்.
மனதை உலுக்கும் பாத்திரங்கள்
வீரப்பண்ணை கிராமத்தில் தமிழ்ச் செல்வி யின் பெற்றோர் உள்ளிட்டு ஊரோடு சேர்ந்து மாத விடாய் எட்டிய பெண்கள், அயலி பெண் தெய்வ கோயிலுக்கு செல்லவும் கூடாது, படிப்பையும் தொடரக் கூடாது என்கிறார்கள். கதையின் நாயகி யான தமிழ்ச் செல்வி, மாதவிடாய் அடைந்ததை பெற்றோரிடம் சொன்னால் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அதனை சொல்லாமலே மறைத்து விடுகிறாள். தான் மருத்துவராக வரவேண்டும் என்ற கனவு நனவாகாது என்பதால் இந்த முடிவை எடுக்கிறாள். இவளோடு படிக்கும் சில மாணவி யர் மாதவிடாய் காரணமாக பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டு திருமணமாகிறது. இளம் வயதி லேயே திருமணமாகி குடிகார கணவன் இறந்து போக, குழந்தையோடு கைம்பெண் நிலைக்கு தள்ளப்படும் பாத்திரங்கள் நம் மனதை உலுக்கக் கூடிய விதத்தில் படத்தில் இடம்பெற்றுள்ளன. கடந்த காலத்தில் மதத்தின் பெயராலும், சாதி வழக்கத்தின் பெயராலும் கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ளது. அயலி திரைப்படத்தில் சாமியின் பெயரால் பெண் கல்வி மறுக்கப்படும் கொடுமை நடக்கிறது.
ஒரு கட்டத்தில் தனது தாயிடம் உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ்ச் செல்விக்கு ஏற்படுகிறது. அடுத்து ஊருக்கும் தெரிந்துவிடுகிறது. பிரச்ச னை பெரிதாகிறது. ஊரே கலவரச் சூழலுக்கு ஆட்படுகிறது. அதுவரையில் ஊரின் கட்டுப் பாட்டை ஏற்று தனது பெண் குழந்தைகளை கோயி லுக்கும், பள்ளிக்கும் அனுப்பாமல் திருமணம் முடித்து வைத்த தாய்மார்களை, தமிழ்ச்செல்வி தனக்கு ஆதரவாகவும், பெண் கல்வி மறுக்கப் படக் கூடாது என்பதற்காகவும் திரட்டுகிறாள். இந்த நிகழ்வுகளை திரைக்கதை மற்றும் வசனங் களின் ஊடாக இயக்குநர் சிறப்பாக வெளிப் படுத்தியிருக்கிறார். பெண்களுக்கு கல்வி மறுக்கப்படக் கூடாது என்று வாதிடுவதும், கல்வி என் உரிமை என்றும், அதை தடுக்க சாமி யாலோ, ஆசாமியாலோ முடியாது என்று தமிழ் செல்வி வாதிடுவதும் கதாபாத்திரங்கள் மூலம் அற்புதமாக படத்தில் கொண்டுவரப் பட்டுள்ளது. மாதவிடாய் அடைந்த தமிழ்ச் செல்வி, கோயிலுக்குள் செல்வதுடன், மேற்படிப்புக்காக ஊர் கட்டுப்பாட்டை மீறி செல்கிறபோது ஆத்திர மடைந்த பழமைவாதிகள் கோயிலை எதுவும் செய்யவில்லை; ஆனால் பள்ளிக் கட்டடத்தை தாக்குகிறார்கள். பெண்களுக்கு கல்வி மறுக்கப் படுவதற்கான காரணம் சாமி அல்ல, பெண் அடிமைச் சிந்தனைதான் என்பதை படம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.
அக்கறைமிக்க கலைஞர்கள்
நடிகர்கள் அபி நட்சத்திரா (தமிழ்ச் செல்வி), அனுமோள் (தாய்), மதன் (தந்தை) அக்கறையுடன் உழைத்துள்ளனர். எல்லா கலைஞர்களுமே தங்கள் பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். ரேவா இசையமைப்பு சிறப்பாக இருந்தது. இராம்ஜி ஒளிப்பதிப்பும், கணேஷ் சிவாவின் படத்தொகுப்பும் படத்திற்கு உயிரூட்டியுள்ளது. இயக்குநர் முத்துக்குமாரின் எழுத்தும் இயக்கமும் பாராட்டுக்குரியவை. நகைச்சுவைக் காட்சிகள் கதையோடு இணைந்து வருகின்றன. சண்டைக் காட்சிகள் இல்லை. விரசம் இல்லை. படம் பார்க்க வந்திருந்த கீதா இளங்கோவன், மாதவிடாய் தொடர்பாகவே சமூகத்தில் நிலவும் தவறான பார்வையை குறித்து பேசினார். சமூகப் பார்வையுடன் நல்ல விசயத்தை திரைப்படமாக எடுத்தால் வணிக ரீதியான வெற்றியும் சாத்தியம் என்ற நம்பிக்கையை ‘அயலி’ உறுதி செய்துள்ளது. ஜீ 5 என்ற இணைய தள சேவையில் படம் ஒளிபரப்பாகிறது. நல்ல சினிமா வரலாற்றில் அடுத்த முக்கியமான படைப்பு இது என்று பாராட்டலாம்.