articles

img

என்றென்றும் நினைவில் தோழர் புத்ததேவ்! -வீ.பா.கணேசன்

1977 ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தது. அந்த அரசில் செய்தி மற்றும் கலாச்சாரத் துறையின் அமைச்சராக தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 33. அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மேற்குவங்க மாநிலத் தலைவராக இருந்தார். 

அன்று தொடங்கி 2011 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் தோல்வியுற்று முதல்வர் பதவியில் இருந்து வில கும் வரை (இடையில் 1982-87 வரை யிலான காலத்தில் அவர் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றதால் பதவி யில் இல்லை) கலாச்சாரத் துறை அவ ரது பொறுப்பில் தான் இருந்து வந்தது. அந்த அளவிற்கு இத்துறையோடும் அதன் பணிகளோடும் அவருக்கு மிக நெருக்கமான, உயிரோட்டமான ஈடுபாடு இருந்தது.

அவருடனே மேற்குவங்க செய்தி மற்றும் கலாச்சாரத் துறையின் துணை இயக்குநராக, கால் நூற்றாண்டு காலம் பணியாற்றும் வாய்ப்பு, இக்கட்டுரையாளரான எனக்கு கிடைத்தது.

1983ஆம் ஆண்டு இத்துறையில் ஒரு கீழடுக்கு அதிகாரியாக பணியில் சேர்ந்தேன். அன்று தொட்டு, இறுதி யாக 2019 ஆம் ஆண்டு  கொல்கத்தா பிரிகேட் பரேடு  மைதானத்தில் நடை பெற்ற மாபெரும் பேரணியின்போது அவரைச் சந்தித்தது வரையிலான இடைப்பட்ட காலங்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு தருணங் களில், அவருடன்  பேசவும், விவாதிக்கவும்,  கலந்துரையாடவும், அவ்வப்போது வாதாடவும் வாய்ப்பளித்த மாபெரும் மனிதராக அவர் விளங்கினார். 

ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்...

1977ஆம் ஆண்டு அமைச்சராக அவர் பொறுப்பேற்ற பிறகு, அவருக்கு கொல்கத்தா மேம்பாட்டுக் கழகத்தி னால் அமைச்சர் என்ற வகையில் ஒதுக்கப்பட்ட இரண்டு படுக்கை அறை கள் மட்டுமே கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பில் தான் அவர் இறு திக் காலம் வரை வாழ்ந்து மறைந் தார். அவரது ஒரே மகன் சுசேதன். மனைவி மீரா,  நூலகராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். 

அவரை வீட்டில் சந்தித்த ஆரம்ப  நாட்களில் அவரது  தாயும் உடனிருந் தார். 

இந்த இடைப்பட்ட காலத்தில் கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினராகவும் அரசியல் தலைமைக் குழு உறுப்பின ராகவும் பொறுப்பேற்று அவர் செயல் பட்டார். அவரது எளிமை எவராலும் கனவில் கூட நினைக்க ஒண்ணாதது. அவர் நிகழ்வுகளில் பங்குகொள்ள சென்னை வரும் பொழுது, வந்து இறங்கியவுடன், இங்கு தங்கியிருக்கும் நாட்களை பொறுத்து, ரூ. 1000, ரூ. 2000, ரூ. 5000 என்று என்னிடம் முதலில் கொடுத்துவிடுவார். ‘என்னு டைய செலவுகளை எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிடு வார்.  பயணத்தின் முடிவில் அவருக்கு ஆன செலவுகள் அனைத்தையும் குறிப்பு வைத்திருந்து  ‘மீதம் இவ்வ ளவு தொகை’ என்று கொடுப்பேன்; அல்லது  ‘நீங்கள் இன்னும் நூறு ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னவுடன் அவர் அந்த ரூபாயை எடுத்துக் கொடுத்து விடுவார். 

எளிய மனிதர்களின் தோழர்

அது மட்டுமல்ல; ஒரு முறை தமிழ் நாடு அரசு அமைச்சர் ஒருவரின் இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக சென்றிருந்த பொழுது அந்த அமைச்சர்,  தோழர் புத்ததேவ் அவர்களுடன் வந்திருந்த காவலர்,  ஓட்டுநர் ஆகியோரை மிகவும் மரி யாதைக் குறைவாக நடத்தியதை பார்த்தவுடன் மிகுந்த வேதனைப்பட்டு உடனே சந்திப்பை முடித்துக் கொண்டு, நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு திரும்பிவிட்டார்.  அவர்கள் இருவரையும் மேலே அழைத்துவரச் செய்து, அவர்களுக்கு இனிப்பு, காரம், தேநீர் வழங்கி, தன்னால் இத்த கைய அவமானம் அவர்களுக்கு நேர்ந்தமைக்காக மன்னிப்பையும் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத் தில் தொடர்புடைய அந்த ஓட்டுநர் என்னை பார்க்கும் போதெல்லாம் அதைப்பற்றிச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போவார். 

நந்தன் வளாகம்

இறுதி வரை அவர் பொறுப்பில் இருந்த செய்தித்துறையைப் பொறுத்த வரையில் அவரது பங்களிப்புகளி லேயே மிகவும் பெருமையானது என்று குறிப்பிடத்தக்கது கொல்கத்தா நகரின் மிகச்சிறந்த திரைப்பட வளாகமாக இன்று திகழும் நந்தன் வளாகம் ஆகும். 

இந்த வளாகம் உருவாகும் காலத் தில் ஒவ்வொரு நாளும் மாலை நேரம் அங்கு வந்து கட்டிடப் பணிகள் எவ்வ ளவு முன்னேறி இருக்கிறது என்று நேரடியாக பார்வையிட்டுக் கொண்டே இருப்பார். இந்த வளாகத்தின் ஆலோ சனைக் குழு தலைவராக இருந்த பிரபல திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரேவும் அவரைப் போன்றே மாலை நேரங்களில் அங்கு வந்து கட்டிடப் பணிகள் பற்றி விவாதிப்பார். அந்த கட்டிடம் உருவாவதற்கு முன்பிருந்தே பல நாட்கள் இந்த இருவரையும் கொல்கத்தாவில் அந்த வளாகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துவந்தது. 

2015-16 வரை ‘நீங்கள்’ (வங்கா ளத்தில் அப்னி) என்றே என்னை எப்போதும் அழைத்து வந்த அவர், அதன்பிறகு, ‘ நீ’ (வங்காளத்தில் வய தில் குறைந்தவர்களை துமி என்பார் கள்; ஆனால் அவர் அதை விட மேலும் நெருக்கத்தை எதிரொலிக்கும் துயி என்ற வார்த்தையை பயன் படுத்தினார்) என்று அழைக்கத் தொட ங்கியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒன்றாகும். 

சிறந்த எழுத்தாளர்

இடதுசாரி அரசியல்வாதி, அமைச்சர்,  முதல்வர் என்ற பொறுப்பு களை திறம்பட நிறைவேற்றி மறைந்த தோழர் புத்ததேவ் தனிப்பட்ட வகை யில் மிகச்சிறந்த வாசகர். எழுத்தா ளர். மொழிபெயர்ப்பாளர்.  மாயா கவோஸ்கியின் கவிதைகளையும், உலகப்புகழ்பெற்ற கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்-இன் பல கதைக ளையும், எழுத்துக்களையும் வங்காள மொழியில் மொழிபெயர்த்தவர். 

நாடக ஆசிரியர்.  பாபர் மசூதி  இடிப்பினைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் இனத்தவரிடையே எழுந்த மனப்பிளவை ‘துர்சமாய்’ என்ற பெய ரில் 1993ஆம் ஆண்டில் நாடக மாக உருவாக்கினார். 2015-17  ஆம் ஆண்டுகளில் ‘திரும்பிப் பார்க்கி றேன்’ என்ற தலைப்பில் இரு சிறு நூல்களை அவர் எழுதினார். 

முதல் பகுதி மேற்குவங்க இடது முன்னணி அரசின் முதல் ஐந்து ஆண்டு சாதனைகளை விவரித்தது. இரண்டாவது பகுதி இடது முன்னணி அரசின் இறுதி ஐந்து ஆண்டுகளில் எதிர் கொண்ட சவால்களை விவரிப்ப தாக அமைந்திருந்தது. மத்தியில் வலதுசாரிக் கட்சியின் ஆதிக்கம் வலுப்பெற்று வந்த தருணத்தில் 2018 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பாசிசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலை எழுதினார்.  2019 ஆம் ஆண்டில் ‘சொர்க்கத்தின் கீழே  களேபரங்கள்’ என்ற தலைப்பில் எழுதிய சிறு நூலில் சீனாவின் பெருஞ் சுவர் கட்டப்பட்ட காலத்திலிருந்து தொடங்கி அலிபாபா நிறுவனத்தின் வளர்ச்சி வரையிலான காலத்தை விவரித்திருந்தார். 

மூச்சுத்திணறல் மற்றும் பார்வைக் கோளாறு காரணமாக உடல் நிலை மேலும் மோசமாகி வந்த நிலையில், அரசியல் தலைமைக்குழு உறுப்பின ரிலிருந்து தொடங்கி மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினர் தகுதி வரை யில் கட்சியின் பல்வேறு பொறுப்பு களிலிருந்தும் படிப்படியாக அவர் விலக நேர்ந்தது. 

இறுதி மூச்சுவரை எளிமையின் சின்னமாக, தோழர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக, எழுத்தாளர்கள் – கலைஞர்களின் பாதுகாவலராக விளங்கிய தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா அவர்களது நினைவிற்கு நெஞ்சார்ந்த செவ் வணக்கங்கள். என்றென்றும் நினை வில் வாழ்வீர்கள் தோழர்!

-வீ.பா.கணேசன் கட்டுரையாளர் :  மேற்குவங்க செய்தி மற்றும் கலாச்சார துறையின் 
உதவி செய்தி இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.