இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை குறித்து பல்வேறு தரவுகள் இப்பொழுது பயன்படுத்தப்படுகின்றன. இதைப் பற்றி குழப்பங்கள்தான் மிஞ்சுகின்றன. திட்டமிட்டே தான் இது நடக்கிறது.
காவலர் பதவிக்கான 60,000 காலிப் பணியிடங்க ளுக்கு உத்தரப்பிரதேசத்தில் சுமார் 47 லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள் என்பது மோடி அரசின் முகத்தில் அறைந்த உண்மை.
பிரதமரின் தூக்கத்தைக் கெடுத்த விவரங்கள்
கடந்த மூன்று அல்லது நான்கு வருடங்களில் 8 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளித்துள் ளோம் என, ரிசர்வ் வங்கியின் அறிக்கையை மேற் கோள்காட்டி, எதிர்க்கட்சிகள் வேலையில்லா திண்டாட்டம் குறித்து கதை கட்டுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார்.
உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறையவே வருகிறது; அவை இன்னும் வேலை வாய்ப்புகளை உரு வாக்கும் என்று பெருமை பேசுகிறார். ஆனால் உண்மையில், திருவாளர் மோடி அவர்களின் உறக்கத்தை வேலைவாய்ப்பு பிரச்சனை கெடுக்கி றது. அதை எதிர்கொள்ளவே இப்படி அவர் தன்னை சமாதானம் செய்து கொள்கிறார். மேலும் சிட்டி குரூப் போன்ற நிதி நிறுவனங்களின் வேலை வாய்ப்பு குறித்த அறிக்கைகள் அவரை அதிகமாகவே மிரட்டி இருக்கிறது போலும்!
ஜூலை 7 இல் வெளியிடப்பட்ட KLEMS (Capital, Labour, Energy, Material and Service - மூலதனம், உழைப்பு, சக்தி, மூலப்பொருள் மற்றும் சேவை) தரவு கள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆய்வு முறைக ளையும் அணுகுமுறைகளையும் விளக்குகிறது. உற் பத்தியின் மொத்த மதிப்பு, தொழிலாளர் வேலை வாய்ப்பு மற்றும் தரம், மூலதன பங்கு, அதன் உள்ள டக்கம் ஆகியவை 27 தொழில் துறைகளில் எப்படி உள்ளது என்று நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு தான் ரிசர்வ் வங்கி வழங்கிய அந்த தரவுகள்.
அதாவது “விவசாயத் துறை இல்லாமல் உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் 2014 - 2023 வரையில் 8.9 கோடி வேலைகள் உருவாகிறது; 2004- 2014 இல் இது 6.6 கோடியாக இருந்தது” என்கிறது அந்தத் தரவு.
இந்தியாவின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கை 57.8 கோடி. ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒருங்கி ணைந்த துறை நிறுவனங்களின் கணக்கெடுப்பு 56.8 கோடி என்று கூறுகிறது.
ஆனால் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) 2024ல் வெளியிட்ட அறிக்கை, கடந்த எட்டு மாதங்களில் முன்பு எப்போதும் இல்லாத அள விற்கு வேலையின்மை 9.2 சதவீதமாக உயர்ந்துள் ளது எனக் கூறுகிறது. இது வேலை வாய்ப்பு குறித்து மோடி அரசு அளிக்கும் விவரங்களோடு முரண்படு கிறது.
மிகச் சமீபத்தில் வெளியிடப்பட்ட கேஎல்இஎம்எஸ் தரவுகள் இந்திய பொருளாதாரத்தில் உற்பத்தியின் வளர்ச்சி யை கண்காணிக்கவும் மதிப்பிடவும் உதவும் விரி வான அளவீட்டு கருவியாகும். அது வேலை வாய்ப்பை சுயேச்சையாக மதிப்பிடவில்லை. அரசின் தரவுகளை யே எடுத்துக் கொள்கிறது. தொழிலாளர் குறித்த விவரங்களுக்கு 1983 இல் இருந்து 2011 - 12 வரை கிடைக்கும் தேசிய மாதிரி சர்வே (NSSO), காலவாரி யான தொழிலாளர் சக்தி பற்றிய சர்வே (PLFS) மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் வேலையின்மை சர்வே (IEUS) ஆகிய முடிவுகளை அது பயன்படுத்துகிறது. ஆனால் இவை மூன்றும் அரசின் அதிகாரப்பூர்வ தளங்களின் விவரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை ஒன்றோடு ஒன்று மாறுபடப் போவதில்லை. எனவே பிரதமரோ அல்லது பாரத ரிசர்வ் வங்கியோ கேஎல்இஎம்எஸ் தரவுகளை, வேலை வாய்ப்பு புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் ஒரு சுயேச்சையான அமைப்பின் தரவுகளாக முன் வைக்கக் கூடாது. ஆனால் பொருளாதார நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் திரு மோடி அவர்களுக்கு தவறான விளக்கங்கள் அளித்து வழிநடத்தி உள்ளனர் என்பது தெளிவாகிறது.
காலாவதியான தரவுகள்!
பல்வேறு ஆதாரங்கள், வேலை வாய்ப்புகளின் பல்வேறு மதிப்பீடுகளை ஏன் தருகின்றன? இந்திய பொருளாதாரத்தின் சிக்கலான கட்டமைப்பு குறித்து நம்பகமான தரவுகள் இல்லாததே இதற்கு காரணம். இந்தியா, அமைப்புசாரா மற்றும் அமைப்பு சார்ந்த துறைகளைக் கொண்டது. ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளின் தரவுகளை சட்டப்பூர்வமாக வெளி யிடப்படும் வருடாந்திர அறிக்கை மூலம் பெற முடி கிறது. 94 சதவீதம் தொழிலாளர்களை பிரதிநிதித் துவப்படுத்தும் அமைப்பு சாராத துறைக்கு அப்படி ஒரு ஏற்பாடு இல்லை. வேறு எந்த நாட்டிலும் இந்தத் துறை இவ்வளவு பிரமாண்டமானதாக இல்லை. ஆனாலும் இங்கே அது பற்றிய விவரங்களை சேகரிப்பதில் அரசு ஆர்வம் காட்டுவதில்லை. 11 கோடி விவசாயப் பண்ணைகளும் 6.5 கோடி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் இங்கே உள்ளன. ஆண்டுதோறும் இவற்றை கணக்கெடுப்பது கடினம்.
10 வருடத்திற்கு ஒருமுறை மக்கள் கணக்கெடுப் பும், ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நிறுவனமல்லா தொழிலகங்களின் ஆண்டு சர்வே (ASUSE) மூலம் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த ஆய்வை ஆண்டுதோறும் வெளியிட அரசு உறுதி அளிக்கி றது. ஆனால் கடைசியாக 2012 -17 ஆண்டுதான் வெளி யிடப்பட்டது. எனவே இப்போது சேகரிக்கும் விவ ரங்கள் காலாவதியான தரவுகளின் அடிப்படையில் ஆனது என்பதை நினைவில் நிறுத்துவோம்.
மோடி ஆட்சியின் அலங்கோலங்கள்!
2016 - 24 வரை பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி யானது இந்திய பொருளாதாரத்தின் மீது நான்கு பலத்த தாக்குதல்களை நடத்தியது.
1.பண மதிப்பு நீக்கம் (2016), 2.ஜி. எஸ்.டி (2017), 3.கோவிட் பொது முடக்கம் (2019) மற்றும் 4.வங்கி அல்லாத நிதி (2020) நிறுவனங்களின் நெருக்கடி
எனவே, 2016 க்கு முந்தைய ஆண்டுகளின் தரவு களைப் பயன்படுத்தி இல்லாத ஒன்றை வடிவமைக்க முயல்வது சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
இந்த நான்கு அதிர்ச்சிகளுமே அமைப்புசாரா துறையை கடுமையாக பாதித்தன. மூலதனம் வறண்டு போனதால் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக்க ணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். நகரங்கள் மற்றும் கிராமங்களின் அளவுகள் மாறின. இப்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து வளர்ச்சியை வடிவமைப்பது பொருத்தமாக இருக்காது. 2024, நிறுவனமல்லா தொழிலகங்களின் ஆண்டு சர்வே, (ASUSE) கிராமங்களில் 8,495 நிறு வனங்களையும் நகர்ப்புறங்களில் 7,857 நிறுவனங்க ளையும் ஆக 16,382 நிறுவனங்களை மட்டுமே ஆய்வு செய்ய முடிந்தது.அதேபோல மொத்தமாக கிராமங்க ளில் 2,58,206, நகரங்களில் 2,00,642 நிறுவனங்களி லும் ஆய்வு நடத்தப்பட்டது. 2022-23 ல் 6.5 கோடி நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட இந்த நான்கு அதிர்ச்சிகள் கிராமப்புற- நகர்ப்புற விகிதங்களை யும் சிறிய பெரிய நிறுவனங்களின் விகிதங்களையும் மாற்றி அமைத்திருக்கும். பல லட்சக்கணக்கான சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை அழித் தொழித்துவிட்ட பிறகு செய்யப்படும் ஆய்வு ஆட்சியா ளர்கள் விரும்புகின்ற முடிவைத் தருவதில் வியப்பில்லை.
PLFS மற்றும் CMIE இரண்டிற்கும் இடையே வேறுபாடுகள்!
காலவாரியான தொழிலாளர் சக்தி பற்றிய சர்வே (PLFS) என்பது பரவலாக மேற்கோள்காட்டப்ப டும் அதிகாரப்பூர்வ தரவுத்தளம். இதிலிருந்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) பெரிதும் மாறுபடுகிறது. வேலை வாய்ப்புகள் பெறுப வர்களின் எண்ணிக்கை குறித்த வேறுபாடுகள் உள்ளன. சிஎம்ஐஇ சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வரையறையை ஏற்கிறது. வேலை மூலம் வருமானம் பெறுபவர்களை மட்டுமே பணியில் அமர்த்தப் பட்டுள்ளதாக கணக்கிடுகிறது. வேலையில் அமர்த்தப் பட்டவர்களாக கருதுகிறது. ஆனால் பிஎல்எஃப்எஸ், ஊதியம் பெறாமல் உழைப்பைச் செலுத்துபவர்க ளையும் வயல்களில் விவசாயம் செய்வோரையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில் 50 முதல் 55 சதவீதம் பேர் வேலை வாய்ப்பை பெற்றதாக ஒரு சித்தரிப்பை உருவாக்கு கிறது. அதே நேரத்தில் சிஎம்ஐஇ இந்த எண்ணிக்கை 40 லிருந்து 45 சதவீதம் எனக் கூறுகிறது. இரண்டிற்கும் இடையே சுமார் வித்தியாசம் ஒன்பது கோடிப் பேர்.
எல்லோருமே ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு தானே இருக்கிறார்கள் என மோடி அரசாங்கம் சமாளிக்கிறது. ஒன்றுமே அறியாதவர் போல பிரதமர் பேசுகிறார். வீட்டு வேலை செய்து
பிழைப்பு நடத்தும் லட்சக்கணக்கான மக்களையும் வேலையில் அமர்ந்தவர்கள் தான் என்று கணக்கிட்டால் பிரதமர் இன்னும் பல கோடிப் பேருக்கு வேலை அளித்ததாகக் கூட பெருமிதம் அடையலாம்.
வேலை கிடைக்காமல் இளைஞர்கள் போராடு வது, தேர்வுகளில் சிக்கலை எதிர்கொள்வது ஆகியவை வேலையில்லா திண்டாட்டத்தை நமக்கு படம் பிடித்துக் காட்டுவதாகும். மோடி கூட்டணி அரசு வெட்கத்தை விட்டு இதனை ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லை யென்றால் இளைஞர்களின் விரக்தி கொதிநிலையை அடைந்து போராட்டங்கள் வெடிக்கும்.
கட்டுரையாளர் : ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின்
பொருளாதாரப் பேராசிரியர் (ஓய்வு)
தி இந்து 20/7/24
தமிழில் : கடலூர் சுகுமாரன்