articles

img

முடி நரைப்பதற்கு என்ன காரணம் அதன் ஸ்டெம் செல்கள்

     முடி நரைப்பதற்கு காரணம் அதன் ஸ்டெம் செல்கள் மேலும் கீழும் அலைவது தடைப்படுவதுவே என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு ஏப்ரல் 27 நேச்சர் ‘nature’ இதழில் வந்துள்ளது. முடியின் நிறத்திற்கு காரண மான நிறமிகளை உற்பத்தி செய்யும் ஸ்டெம் செல்கள் மற்ற ஸ்டெம் செல்களை போல ஒரே இடத்தில் இருப்பதில்லை. மெலனோசைட் எனப்படும் இவை, எலியின் ஃபாலிக்கிள் எனப்படும் மயிர் நுண்ணறைக்குள் இரண்டுவித முதிர்ச்சி நிலைகளுக்கு இடையே ஊசலாடிக்கொண்டே மேலும் கீழும் போகின்றன. இந்த வினோதமான இயக்கம் தடைப்படும்போது மயிரானது அதன் நிறத்தை இழக்கிறதாம்.

     பொதுவாக ஸ்டெம் செல்கள் நுண்ணறை போன்ற ஒரு இடத்தில் தங்கி தேவைப்படும்போது செல் பிரிவை உண்டாக்கும். பிரிந்த செல்கள் அங்கிருந்து வெளியேறி ஆச்சரியமான விஷயங்களை செய்யும். ஸ்டெம் செல்கள் முதிராதவை. அவை மேலும் பல செல்களை உண்டாக்குகின்றன. அவை முதிர்ச்சி அடைந்து குறிப்பிட்ட பணிகளை செய்யும். மெலனோசைட் ஸ்டெம் செல்கள் மெலனோசைட்டு களை உண்டாக்குகின்றன.அவை மெலனினை உற்பத்தி செய்கின்றன. தோலுக்கும் முடிக்கும் நிறத்தைக் கொடுப்பது மெலனின் எனும் இந்த வேதிப்பொருளே.

    நியூயார்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஸ்டெம் செல் விஞ்ஞானிகள் குயி சான் மற்றும் மயூமி சுஸுகி முடி நரைப்பது குறித்த ஆய்வில் இறங்கவில்லை. தோல் புற்று நோய்க்கு மெலனோசைட் ஸ்டெம் செல்கள் காரணமாக இருக்கலாம் என்று இவர்கள் முன்பு கூறியிருந்தார்கள். ஆகவே முடி நுண்ணறைகளில் இவை எவ்வாறு இயங்குகின்றன என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். அந்த ஆய்வின் போதுதான் அவை நுண்ணறையின் அடித்தளத்திலிருந்து ஸ்டெம் செல்கள் புடைப்புப் பகுதிக்கு சென்று மீண்டும் கீழ்ப் பகுதிக்கு வருவதைக் கண்டனர்.  

    எலிகள் வயதாகும் போதோ அல்லது அவற்றின் முடியை களைந்தாலோ ஸ்டெம் செல்கள் புடைப்பு பகுதியிலேயே தங்கிவிடுகின்றன. அதனால் அடிப்பகுதிக்கு வந்து மெலனோசைட்டுகளை தயாரிக்கும் நிலைக்கு மாற முடிவதில்லை. இதனால் முடி நரைக்கிறது. ஸ்டெம் செல்களை மீண்டும் இயக்க முடிந்தால் முடிக்கு அதன் பழைய நிறம் கிடைக்கிறது. இந்தவித செல்களின் இயக்கமே மனித முடி நரைப்பதற்கும் காரணமாக இருக்கலாம். ஆனால் மனிதர்களின் மயிர் நுண்ணறைகளை போதிய காலம் கண்காணித்து வந்தாலே அதை உறுதியாக கூற முடியும்.