தஞ்சாவூர் பெரியகோவிலில் பேட்டரி கார் சேவை தொடக்கம்
தஞ்சாவூர், மே 19- தஞ்சாவூர் பெரிய கோயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளி களுக்காக பேட்டரி கார் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் பெரியகோவிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சென்று வழிபடுவதற்கு வசதியாக, பேட்டரி கார் சேவையை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தஞ்சாவூர் பெரியகோவிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வெளியிலிருந்து உள்ளே செல்வதற்கு வசதியாக சிட்டி யூனியன் வங்கி அலுவலர்கள், தஞ்சாவூர் கிங்ஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் இணைந்து 3 பேட்டரி கார்களை தருகின்றனர். இதில், முதல் கட்டமாக ஒரு பேட்டரி காரை சுற்றுலாத் துறையினரிடமும், இந்திய தொல்லியல் துறையினரிடமும் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர். அடுத்தடுத்த நாட்களில் மற்ற இருபேட்டரி கார்களை வழங்கவுள்ளனர். இந்த வாகனத்தில் செல்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. மக்களவையில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், தஞ்சாவூர் பெரியகோவிலை மேம்படுத்துவதற்கு முதல் தவணையாக ரூ.25 கோடி ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, ஒரு மாதத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது. இதன் பின்னர், பணிகள் நடைபெறும். இதேபோல, வெளியிலுள்ள அகழியை மேம்படுத்துவதற்காக இரண்டாவது தவணையை ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம்” என்றார்.