tamilnadu

img

நகரத்தை அழகுபடுத்துதல் எனும் பெயரில் உழைப்பாளி மக்களை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு...

கோவை:
நகரத்தை அழகு படுத்த உழைப்பாளி மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முத்தண்ணன்குளம் பகுதிமக்களுக்கு நகரப்பகுதிலேயே மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும் ஞாயிறன்று பி.ஆர்.நடராஜன் எம்.பி., தலைமையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை முத்தண்ணன் குளக்கரையில் குமாரசாமி காலனி பகுதி அமைந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி, மாநகராட்சி நிர்வாகம்வீடுகளை இடிக்கும் பணிகளை துவக்கி யுள்ளது. எவ்வித அறிவிப்புமின்றி சனிக்கிழமையன்று நூற்றுக்கணக்கான காவல்துறையினரின் துணையுடன் இயந்திரங்களை வரவழைத்து மாநகராட்சி அதிகாரிகள் சர்வாதிகரமாக இடித்தனர்.  இந்நிலையில் ஞாயிறன்று மீண்டும் இடிப்பதற்கான வேலையை துவங்கமுயற்சித்தனர். இதற்குள் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் மற்றும் பொது மக்கள் தடாகம் சாலையில் அமர்ந்தும், பொக்லைன் இயந்திரங்கள் முன்பு அமர்ந்தும் மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அரசு நிர்வாகம் வேறு வழியின்றி பேச்சுவார்த்தை நடத்தியது.

மாற்று இடம்வழங்காதவர்களின் வீடுகளை இடிக்கக்கூடாது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் நகரத்திற்குள்ளேயே இருப்பதால் நகரப்பகுதி யிலேயே மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தனர். இதனையடுத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்பது எனவும், அதுவரை ஆட்சேபணை தெரிவித்துள்ள வீடுகளை இடிப்பதில்லை எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.முன்னதாக இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், இப்பகுதியில் உள்ள மக்களுக்கு புறநகர் பகுதிகளில் மாற்று இடம் வழங்கப்படுவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. மாற்று இடம் வழங்காதவர்களுக்கு நகரப்பகுதிகளில் மாற்று இடம் வேண்டும். நகரத்தை அழகு படுத்துகிறோம் என்கிற பெயரில் உழைப்பாளி மக்களை வெளியேற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நகரின் வளர்சிக்கு காரணமே இந்த உழைப்பாளி மக்கள்தான். இதனை புரியாத அமைச்சர்கள் ஆட்சியில் இருப்பதுதான் வேதனை. மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், மாற்று இடம் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 10 ஆ ம் தேதி நடைபெறுமென உறுதியளித்துள்ளனர். இதனையேற்று தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். உழைப்பாளி மக்களுக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் எங்களது போராட்டத்தை திரும்பப்பெற மாட்டோம் என தெரிவித்தார்.

முன்னதாக இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, பேரூர் நகர செயலாளர் சேட்டு என்கிற பாலசுப்பிர  மணியன், மேற்கு நகரக்குழு உறுப்பினர் ராதா,இந்திய கம்யூனிட் கட்சியின் மாநில பொருளா ளர் எம்.ஆறுமுகம், மேற்கு நகர செயலாளர் ஜேம்ஸ், சிபிஐஎம்எல் மாநகர செயலாளர் வேல்முருகன் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் முன்னிலை வகித்தனர். 

ஊருக்குத்தான் உபதேசம்  காவல்துறைக்கு இல்லையோ?
கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க கட்டாயம் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர காவல் ஆணையர் சனியன்று கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதெல்லாம் மக்களுக்குத்தான் அரசு நிர்வாகத்திற்கு பொருந்தாது என்பதை நிரூபிப்பது போல் இருந்தது காவல்துறையினரின் நடவடிக்கை. ஞாயிறன்று குமாரசாமி காலனியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் வீடுகளை அகற்ற நூற்றுக்கணக்கான காவல்துறையினர் எவ்வித தனிமனித இடைவெளியும் இல்லாமல் அணிவகுத்து வந்தனர். ஊருக்குத்தான் உபதேசம் இவர்களுக்கு இல்லை என்று பொதுமக்கள் முணுமுணுத்து சென்றனர்.

;