tamilnadu

img

தே.கல்லுப்பட்டி அருகே பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு....

தே.கல்லுப்பட்டி:
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே உள்ள வேளாம்பூரில் 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 தே.கல்லுப்பட்டி அருகே வேளாம்பூரில் பழமையான சிற்பம் இருப்பதாக கவசக்கோட்டையை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கொடுத்த தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன்,   நாகபாண்டி,  சிவக்குமார் ஆகியோர் வேளாம்பூர் மாரியம்மன் கோவில் பின்புறம் முட்புதரில் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1000 ஆண்டுகள் பழமையான சிதைந்த நிலையில் 24 வது தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பம் கண்டறியப்பட்டது.இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன் கூறியாதவது : 

 அழிந்த ஊரில் அழியாத வரலாற்றுத் தடயங்களுடன் இன்றும் அரசாங்க பதிவேட்டில் மட்டுமே காணப்படும் கிராமம் தான்வேளாம்பூர். இந்தக் கிராமத்தில் அடர்ந்த முட்புதரில் சிதைந்த நிலையில் மூன்று அடி உயரம், இரண்டு அடி அகலம் கொண்ட வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான மகாவீரர் திகம்பரராக தியான கோலத்துடன் நீண்ட துளையுடைய காதுகள், முகம் தெளிவற்று தேய்ந்த நிலையிலும், விரிந்த மார்புடனும் சிலை இருந்தது. 

தேய்ந்த நிலையில் மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தின் மீது சிம்மாசனத்தில் அர்த்த பரியங்கா ஆசனத்தில் (பாதங்கள் இரண்டும் மேல் நோக்கி இருக்கும்படி ஒரு கால் மீதுமறுகாலை மடித்து அமர்வது) யோக முத்திரையுடன் தியான நிலையில் மகாவீரர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.தலையின் பின்புறமாக முக்காலத்தை யும் உணர்த்தும்  விதமாக ஒளி வீசும் பிரபா வளையமும், மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசாணம் எனும் முக்குடையும், பின்புலத்தில் குங்கிலிய மரமும், சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் உருவங்கள் போன்றவை உடைந்த நிலையில் உள்ளது. 

சமீபத்தில் கவசக்கோட்டை செங்கமேடுபகுதியில் கண்டறியப்பட்ட மகாவீரர் சிற்பமும் இச்சிற்ப உருவமும் ஒப்பீட்டின்படி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தாக இந்தச் சிற்பத்தைக் கருதாலம் . இப்பகுதியிலும் ஒரு சமண பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்ததை அறிய முடிகிறது. வேளாம்பூரு க்கு அருகிலுள்ள காரைக்கேணியில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பமும் உள்ளது. இந்தப் பகுதியில் சிதறிக்கிடக்கும் செங்கற்கள் மூலம்இங்கு இருந்த சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக அனு
மானிக்கலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

 ச.நல்லேந்திரன்

;