அமிர்தசரஸ்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு வரும் 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த 21 நாள் ஊரடங்கால் கொரோனா வைரஸ் பரவல் கொஞ்சம் கூட குறையவில்லை.
2-ஆம் நிலையிலிருந்த பரவல் மூன்றாம் நிலைக்கு மாறும் சூழலில் இருப்பதால் ஊரடங்கை நீடிக்குமாறு பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில், ஒடிஷா மாநிலம் முதல் ஆளாக ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலமும் ஊரடங்கை மே 1-ஆம் தேதி வரை நீட்டிப்படுவதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாபில் இதுவரை 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 8 பேர் பலியாகியிருந்த நிலையில், 4 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.