india

img

முஸ்லீம்களுக்கு எதிராக பாஜக-வினர் வெறிப் பிரச்சாரம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

புதுதில்லி, அக்.11- முஸ்லீம்களுக்கு எதிராக வெறிப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக-வினருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தில்லி மாநிலக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

விசுவ இந்து பரிசத் சார்பில் அக்டோபர் 9 அன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பாஜக-வைச் சேர்ந்த மேற்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா, முஸ்லீம்களை முழுமையாகப் பகிஷ்கரித்திட வேண்டும் என்று பேசியிருக்கிறார். மேலும் அவர், முஸ்லீம்களிடமிருந்து எந்தப் பொருள்களையும் வாங்கக் கூடாது என்றும், அவர்களுக்கு ஊதியம் எதுவும் அளிக்கக் கூடாது என்றும் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் வெளிப்படையாகவே புத்திமதி கூறியிருக்கிறார். மேலும் அந்தக்கூட்டத்தில் உரையாற்றிய விசுவ இந்து பரிசத்தின் இணைச் செயலாளர் சுரேந்திர ஜெயின், தில்லியில் வாழும் ஓர் இனத்தினர் (முஸ்லீம்கள் என வாசிக்கவும்) தில்லியை ஒரு  மினி-பாகிஸ்தானாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார். இத்தகைய பேச்சுகள் அனைத்தும் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறி நஞ்சை உமிழும் வெட்கக்கேடான முயற்சியாகும்.

தில்லியில் மக்களுக்கிடையே நிலவும் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் விதத்தில், இத்தகைய மதவெறியைத் தூண்டும் பேச்சுகளை பர்வேஷ் வர்மா முதல் தடவையாகப் பேசிடவில்லை. 2020இல் தில்லியின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, தேர்தலுக்கு முன்பும் பின்பும் பல தடவைகள் அவர் கபில் மிஷ்ராவுடன் சேர்ந்துகொண்டு பேசிய பேச்சுகள்தான் தில்லியின் வட கிழக்குப் பகுதியில் மதவெறி வன்முறை நிகழ்வுகள் நடைபெறவும், அதில் 54 அப்பாவி உயிர்கள் பலியாகவும் காரணமாக இருந்தன. ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் நேரடியாக இயங்கும் தில்லிக் காவல்துறையினர் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

இவ்வாறு முஸ்லீம் மக்களுக்கு எதிராக, மதவெறி நஞ்சை உமிழ்ந்துள்ள பர்வேஷ் வர்மா, சுரேந்திர ஜெயின் மற்றும் பலர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, சட்டப்பூர்வமாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
(ந.நி.)  

;