tamilnadu

img

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி 971 கோடி டாலர் முதலீடு வெளியேறியது

புதுதில்லி:
இந்திய ரூபாய் மதிப்பானது, கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.வாரத் தொடக்க நாளான திங்கட்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 65 காசுகளாக இருந்தது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. புதன்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 55 காசுகளாக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமையன்று திடீரென 26 காசுகள் சரிந்து ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 81 காசுகளாகவும், வார வர்த்தகத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று காலை மேலும் 22 காசுகள் சரிந்து, 72 ரூபாய் 3 காசுகளாகவும் வீழ்ச்சியைச் சந்தித்தது.இது, கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியாகும்.

எனினும் பிற்பகலில் சற்று முன்னேற்றம் அடைந்த இந்திய ரூபாய் மதிப்பு, 2.35 மணியளவில் 71 ரூபாய் 59 காசுகளாக உயர்ந்தது. எனினும் வர்த்தகநேரம் முடிவில், 71 ரூபாய் 77 காசுகளாக மீண்டும் இறக்கத்தைச் சந்தித்தது.இந்த வீழ்ச்சியானது, நடப்பு ஆண்டில் 2019-இல் 3.10 சதவிகிதம் ஆகும்.ஆகஸ்ட் மாதங்களின் நிலவரத்தை எடுத்துக் கொண்டால், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2019 ஆகஸ்ட் மாதத்தில் ரூபாய் மதிப்பு படுமோசமாக  4.60 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. சீனா நாட்டின் பணமான யுவானின் மதிப்பு, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது என்று, அந்த நாடு அறிவித்துள்ளது. இது, இந்தியப் பங்குச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், யதார்த்தத்தில் அந்நிய முதலீடுகள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியதே ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.இந்திய பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள்படி சமீபத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் 971 கோடி டாலர் அளவுக்கு தங்களது முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். மறுபுறத்தில் அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானிய ‘யென்’னில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர். கச்சா எண்ணெய் விலையேற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

;