tamilnadu

img

தீக்குள் புகுந்து 6 முஸ்லிம்களை காப்பாற்றிய இந்து நண்பர்... மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்

புதுதில்லி:
சங்-பரிவாரங்கள் வைத்த தீயில் சிக்கிக் கொண்ட, 6 முஸ்லிம்களை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இந்து நண்பர் ஒருவர் காப்பாற்றியதும், இதில், 70 சதவிகித தீக்காயம் அடைந்த அந்த இந்து நண்பர், தற்போது மருத்துவமனையில் உயிருக்குக் போராடிக் கொண்டிருப்பதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடகிழக்கு தில்லியின் சிவ் விகார் பகுதியில் குடியிருந்து வருபவர் பிரேம்காந்த் பாகேல்.இந்தப் பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் எந்த வேறுபாடும் இல்லாமல், சகோதர, சகோதரிகள் போல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், தில்லி வன்முறையின்போது, பாஜக உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் இந்தப் பகுதியை குறிவைத்து, தனது தாக்குதலை கொடூரமாக அரங்கேற்றியுள்ளது. 

குறிப்பாக, பிரேம்காந்த் என்பவரின் வீட்டின் அருகில் வசிக்கும் முஸ்லிம்களின் வீடு மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில், முஸ்லிம்கள் தீக்குள் சிக்கி, வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்துள்ளனர்.இதனைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரரான பிரேம்காந்த், ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புகுந்து, அங்கிருந்த தனது முஸ்லிம் நண்பர்களை தீக்குள் இருந்து மீட்டுள்ளார். மொத்தம் 6 பேரை இவ்வாறு அவர் காப்பாற்றி யுள்ளார். கடைசியாக, தனது முஸ்லிம் நண்பரின் வயதான தாயை காப்பாற்றி விட்டு பிரேம் காந்த் வெளியே வந்தபோது, பிரேம்காந்த்தின் உடல் ஏறக்குறைய 70 சதவிகித தீக்காயத்திற்கு உள்ளாகி இருந்துள்ளது.அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆம்புலன்ஸ் வரவில்லை. ஒரு நாள் இரவு முழுவதும் தனது வீட்டிலேயே பிரேம் காந்த் தீக்காயத்துடன் சித்ரவதையை அனுபவித்துள்ளார். காலையில்தான் ஜிடிபி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ஆபத்தான நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

;