tamilnadu

பொன்னமராவதி சம்பவம்:

பொன்னமராவதி, மே 5-தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வாட்ஸ் அப் மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மற்றும் பெண்கள் குறித்து அவதூறு பேச்சு பரவியது. இதன் காரணமாக பொன்னமராவதியில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய பல நிகழ்வுகள் நடைபெற்றன. இதைதொடர்ந்து அவதூறு பேச்சு குறித்து பொன்னமராவதி திருக்களம்பூர் கருப்புக்குடிபட்டியை சேர்ந்த கருப்பன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்தி சிங்கப்பூரில் வேலை செய்த செல்வகுமார், வசந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சக்தி என்கிற சத்யராஜ், ரெங்கையா ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் பரிந்துரை பேரில் ஆட்சியர் உமா மகேஸ்வரி மேற்கண்ட நான்கு பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பொன்னமராவதி காவல்துறையினர் நால்வரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

;