tamilnadu

img

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளால் மக்கள் நடமாட்டம் குறைந்தது.....

சென்னை:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது.

தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10 ஆம் தேதி முதல் வருகிற 24 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால், ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.  இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மே 15 சனிக்கிழமை முதல் ஊரடங்கு கடுமையாக்கப் பட்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

2 மணி நேரம் குறைப்பு...
தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி மதியம் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது.தற்போது இந்த கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.டன்சோ போன்ற மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் வினியோகம் செய்ய காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.  பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.

அனுமதி மறுப்பு...
காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.டீ கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை.  மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்.

வழக்கம் போல் இயங்கும்...
ஏ.டி.எம்., பெட்ரோல் டீசல் பங்க்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும்.  ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.  ஏற்கனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும்.  ஏற்கனவே அறிவித்தவாறு முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் (16 மற்றும் 23 ஆம் தேதி) அமல்படுத்தப்படும்.மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், இந்த கடைகளைப் பல்வேறு இடங்களுக்கு பரவலாக மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

;