tamilnadu

img

5 முதல் 8 ஆம் வகுப்பு வரை நாள்தோறும் தேர்வு, சிறப்பு வகுப்புகள்

கோயம்புத்தூர்:
அரசுப் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்த வேண்டும் எனவும், சிறப்பு வகுப்புகள் நடைபெறாத பள்ளியின் ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை யின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வேலைநாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் கூறப்பட்டுள்ளவற்றின் முக்கிய விவரம் வருமாறு: பள்ளியில் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறிந்து பயிற்சி வகுப்புகள் நடத்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தலைமை ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பிற்கான கால அட்டவணையை தயாரித்து, அதன் அடிப்படையில் தினமும் ஒரு பாடத்திற்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும். இதில், 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை 8.30 மணி முதல் 9.15 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். மேலும், மாலையில் 4.30 மணி முதல் 5.20 மணி வரை தினமும் ஒரு பாடத்திற்கு 25 மதிப்பெண்களுக்கு என்ற அடிப்படையில் வினாத்தாள் தயாரித்து தேர்வுகள் அல்லது சிறப்பு வகுப்புகளை கட்டாயம் நடத்த வேண்டும். 
இதன்பின்னர் தேர்வு நடத்திய பாடத்திற்கான விடைத்தாள்களை 2 நாட்களில் மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தேர்வு குறித்த மதிப்பெண்களை பதிவேட்டில் இணைத்து தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும். மேலும், ஒவ்வொரு மாதமும் மாணவர்களின் பெற்றோரிடம் கையெழுத்து பெற்று இருக்க வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர்கள் பராமரித்து வர வேண்டும். ஆய்வு அலுவலர்கள் பள்ளியினை பார்வையிடும்போது இது குறித்ததகவல்களை அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர், சிறப்பு வகுப்பிற்கு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தனித்தனி வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். சிறப்பு வகுப்புகள் நடைபெறாத பள்ளியின் ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 

மாணவர்கள் மன உளைச்சல்
முதன்மை கல்வி அலுவலரின் இந்த சுற்றறிக்கைக்கு மாணவர் - பெற்றோர் சங்கங்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கல்வித்துறையின் இத்தகைய அறிவிப்பால் மாணவர்களின் தனித்திறன் முற்றிலுமாக பாதிப்பிற்குள்ளாகும். நாள்தோறும் தேர்வு, சிறப்பு வகுப்பு என்றால் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வமுள்ள மாணவர்களின் கனவு தகர்க்கப்படும். மாணவர்களுக்கு தேர்வே கூடாது என்கிற விவாதம் நடந்து வருகிற நிலையில், மதிப்பெண்தான் உலகம் என்கிற விநோத நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறப்பு வகுப்புகளுக்கு நகர்ப்புற மாணவர்கள் வந்து செல்ல வசதிகள் உள்ளது. ஆனால் கிராமப்புற, மலைக்கிராம மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் பெரும் சிரமம் உள்ளது. இதனையெல்லாம் கணக்கில் எடுக்காமல் ஏதோ நிர்ப்பந்தம் காரணமாக கல்வித்துறை இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆகவே, மாணவர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் இத்தகைய அறிவிப்பை உடனடியாக கல்வித்துறை திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்தனர். 

;