பெங்களூரு:
அரசியல் சாசனத்தை மாற்ற சிலர் முயற்சி செய்கிறார்கள்; அவ்வாறு நடந்தால் ரத்த ஆறு ஓடும் என்று, காங்கிரஸ் மூத்தத்தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக தலித் மற்றும் பழங்குடியின ஒப்பந்ததாரர்கள் சங்க மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. இந்த மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில்தான், சித்தராமையா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“சமத்துவத்தை ஏற்படுத்த இட ஒதுக்கீடு வழங்குவது மட்டுமே தீர்வு அல்ல.ஆனால், இதுவும் ஒரு வழி. நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தரமான கல்வி, இயற்கை வளங்கள் கிடைக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடைய அனைவரும் பாடுபட வேண்டும்.இன்றைய அரசியல் சாசனம் இல்லாமல் இருந்திருந்தால் நான் முதல்வர் ஆகியிருக்க முடியாது. மோடியும் பிரதமர் பதவிக்கு வந்திருக்க முடியாது. அப்படிப் பட்ட, அரசியல் சாசனத்தை மாற்ற சிலர்முயற்சி செய்கிறார்கள். அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சி செய்தால் ரத்த ஆறுஓடும்.”
இவ்வாறு சித்தராமையா பேசியுள்ளார்.