ரேசன்கடை திறக்ககோரி பெண்கள் தர்ணா
3 Feb 2026, 4:00 pm
<p><strong>ரேசன்கடை திறக்ககோரி பெண்கள் தர்ணா</strong></p>
<p>பொன்னேரி, பிப்.3- பொன்னேரி அருகே சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆமூர் ஊராட்சியில் அடங்கிய வடக்குப்பட்டு கிராமத்தில் பொது விநியோக கடை கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை திறக்கப்படாததால் பொதுமக்கள் கடை முன் அமர்ந்து உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆமூர் ஊராட்சியில் அடங்கிய வடக்குபட்டு கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆமூர் ரேசன் கடைக்கு செல்வதற்கு பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், பகுதிநேர ரேசன் கடை வேண்டுமென வட்டாட்சியர் அலுவலகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பல்வேறு கோரிக்கைகளை அளித்திருந்தனர். அதன் பயனாக பகுதி நேர பொது விநியோகக் கடை கட்டிடத்தை கடந்த ஆண்டு ரூ.9 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடித்தனர். ரேசன் கடை கட்டி ஓராண்டு ஆகியும் இதுவரை கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில் ரேசன் கடையை உடனடியாக திறக்க வேண்டும் என பெண்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
