வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் முகப்பில் பல மாதங்களாக எரியாத விளக்குகள்
22 Jul 2026, 11:01 pm
<p><strong>வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் முகப்பில் பல மாதங்களாக எரியாத விளக்குகள்</strong></p><p>திருப்பூர், ஜூலை 22 - திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் நுழைவாயில் பகுதியில் இருக்கும் மூன்று விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் மாலை நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளது. 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனை ரூ.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு திறந்து வைக்கப்பட்டது. எனினும் பிரம்மாண்டமான கட்டிடமாக இருக்கும் இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லை. அதேசமயம் இந்த வட்டார மக்களுக்கு வேலம்பாளையம் அரசு மருத்துவமனை திறக்கப்பட்டது பேருதவியாக இருக்கிறது. இந்த மருத்துவமனை திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே மருத்துவமனை வளாகத்தின் நுழைவுப் பகுதியில் இருக்கும் பிரதான விளக்குகள் எரிவதில்லை. நுழைவுப் பகுதியிலேயே அவசர சிகிச்சைப் பிரிவும் இருக்கிறது. இதன் முன்புறமும் விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது. இதைப் பயன்படுத்தி போதை ஆசாமிகள், சமூக விரோதிகள் இந்த பகுதியில் அடைக்கலம் ஆகின்றனர். நகரின் சற்று ஒதுக்குப்புறமாக இந்த இடம் இருப்பதால் சமூக விரோதிகள் அடைக்கலம் ஆகும் நிலையில் நோயாளிகள், பொது மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து, பொது நல ஆர்வலர்கள் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை கட்டுமானப் பொறுப்பு பொதுப்பணித் துறைக்கு உரியது. அவர்கள் தான் இப்பணியை மேற்கொள்ள வேண்டும். முகப்புப் பகுதி விளக்குகளை சீரமைத்துத் தர வேண்டும். நாங்கள் பொதுப் பணித் துறையினரிடம் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் என்று மருத்துவமனை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்புடைய துறை அதிகாரிகளிடம் மருத்துவமனையில் விளக்குகள் எரிவதற்கும், பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.</p>
