வெட்டப்பட்ட 3 ஆயிரம் மரங்கள் - 'கருப்பு ஹரேலா’ வாக மாறிய பசுமை திருவிழா!
yesterday
<p>உத்தரகண்ட் மாநிலத்தில் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக 3,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.</p><p>உத்தரகண்டின் சாத் மோட் பகுதியில், பனியாவாலா–ஜாலிகிராண்ட்–ரிஷிகேஷ் நான்கு/ஆறு வழிச்சாலைத் திட்டத்திற்காக பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதியின் பசுமைப் பரப்பு, வனவிலங்கு பன்முகத்தன்மை மற்றும் நுண்ணிய காலநிலை பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், போதுமான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மேற்கொள்ளாமல் மரவெட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>வழக்கமாக ஹரேலா திருவிழாவையொட்டி மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும் நிலையில், இந்த ஆண்டு 3,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஹரேலா திருவிழாவை "கருப்பு ஹரேலா”(Black Harela) என அனுசரித்தனர்.</p><p>சாத் மோட் பகுதியில் வெட்டப்பட்ட மரங்கள் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் நிலையில், மேலும் பல மரங்களை வெட்டும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>இதையடுத்து, கருப்பு நிற ஆடை அணிந்த போராட்டக்காரர்கள் பசுமை அழிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மரவெட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.</p>
