பதவிக்காக யார் காலையும் பிடிக்கும் அனுபவம் எனக்குக் கிடையாது! எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதில்!
8 Apr 2026, 5:30 am
<p><strong>பதவிக்காக யார் காலையும் பிடிக்கும் அனுபவம் எனக்குக் கிடையாது! எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதில்!</strong></p><p>அரியலூர் / பெரம்பலூர், ஏப். 7- "பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் ஓடி ஓடிப் போய் யார் காலையும் பிடிக்கும் அனுபவம் எனக்குக் கிடையாது; சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாத எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் முரட்டு அடிமையாகச் செயல்படுகிறார்" எனத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடினார்.</p><p>அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்துச் செவ்வாய்க்கிழமை அவர் எழுச்சிமிகு பிரச்சாரம் மேற்கொண்டார்.</p><p><strong>'தில்லி அணி'க்கு அதிமுக அடகு</strong></p><p>ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கா.சொ.க. கண்ணனை ஆதரித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழுந்து தவழ்ந்து சென்ற புகைப்படத்தைத் கூட்டத்தில் காட்டினார். "உதயநிதிக்கு என்ன அனுபவம் இருக்கிறது என்று எடப்பாடி கேட்கிறார். உண்மைதான், இவரைப் போலப் பதவிக்காக ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓபிஎஸ் என வரிசையாகக் காலில் விழுந்துவிட்டு, பின் அவர்களையே வாரிவிடும் அனுபவம் எனக்குக் கிடையாது. இப்போது தில்லியில் மோடியின் காலைப் பிடித்துக் கொண்டு தமிழகத்திற்குள் பாஜகவை நுழைய வைக்கப் பார்க்கிறார். தமிழகத்தின் கல்வி நிதியான ரூ. 3,500 கோடியை முடக்கி, இந்தியைத் திணிக்கும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்" என்றார்.</p><p><strong>இந்தியாவே வியக்கும் போக்குவரத்துத் துறை</strong></p><p>பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் போட்டியிடும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரை ஆதரித்துப் பேசிய உதயநிதி, "கடந்த கால அதிமுக ஆட்சியில் ஓட்டை உடைசல் டப்பாக்களாக இருந்த பேருந்துகளை மாற்றி, இன்று இந்தியாவே வியக்கும் வகையில் நவீனப் பேருந்துகளாக மாற்றியுள்ளார் அமைச்சர் சிவசங்கர். மகளிருக்கு விடியல் பயணம் திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 1,000 வரை சேமிப்பு கிடைக்கிறது. காலை உணவுத் திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர்."</p><p><strong>வாக்குறுதிகள்</strong></p><p>மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்றும், உயர்கல்வி பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு நவீன மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். "தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி புலம்பிறார். மக்கள் முடிவு செய்துவிட்டார்கள், மீண்டும் அமையப்போவது திமுக ஆட்சிதான்" என அவர் முழங்கினார்.</p>
