வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
28 Mar 2026, 4:13 pm
<p><strong>வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு</strong></p>
<p>மயிலாடுதுறை, மார்ச் 28- மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி, சீர்காழி குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளி மற்றும் தரங்கம்பாடி புனித தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் முறையே மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் பூம்புகார் சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியரும்,மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பார்வையிட்டார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி (தனி), மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள முதன்மை வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் பணிக்கான முதற்கட்ட பயிற்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில், சீர்காழி (தனி) சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட முதன்மை வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்கள் உட்பட 1,403 அலுவலர்களுக்கு சீர்காழியில் உள்ள குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியிலும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட முதன்மை வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்கள் உட்பட 1,916 அலுவலர்களுக்கு மன்னம்பந்தல் கிராமத்தில் உள்ள ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட முதன்மை வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்கள் உட்பட 1,245 அலுவலர்களுக்கு தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு, வாக்குப்பதிவு நாளன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்களின் வாக்குகளை பதிவு செய்யும் நடைமுறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பார்வையிட்டார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, துணை ஆட்சியர்(ச.பா.தி) கீதா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர்கள் சுகுமாரன், சதீஷ்குமார், ராஜரெத்தினம் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
