அரசமைப்புக்கு எதிரான கருத்தை நீதிபதி தர்மாதிகாரி திரும்ப பெற வேண்டும் - ததீஒமு வலியுறுத்தல்
27 Apr 2026, 7:13 pm
<p>சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, அரசமைப்புக்கு எதிரான, மனு நீதி குறித்த தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.</p><p>தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:</p><p>"மத்தியப் பிரதேசம் போபால் தேசிய சட்டக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள் "தங்களின் பண்பாடு மற்றும் சிந்தனை வேர்களில் இருந்து முற்றிலும் விலகிவிட்டனர்" என்றும் இவர்களை தங்களின் பண்பாட்டு வேர்களுடன் இணைக்க தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் (NLUs) மாணவர்கள் "மனுஸ்மிருதி" "அர்த்த சாஸ்திரம்" போன்றவற்றை கட்டாயமாக படிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து அரசியல் சாசன சட்டத்தின் விழுமியங்களுக்கு முற்றிலும் மாறானது; முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டியது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுட்டிக்காட்டுகிறது.</p><p>இவ்வாண்டு மகத் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு துவங்கியுள்ளது. 1927 மகத் சத்யாக்கிரகத்தின் இரண்டாம் கட்டத்தில் டிசம்பர் 25 அன்று அண்ணல் அம்பேத்கர் "மனுஸ்மிருதியை" எரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் சாசனம் அண்ணல் அம்பேத்கர் அவர்களை வரைவுக்குழு தலைவராகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட போதும் இந்து மத அடிப்படைவாதிகள் அதை எதிர்த்தனர். மனுஸ்மிருதியே இந்தியாவை வழி நடத்த முடியுமென்று வலியுறுத்தினர். நீண்ட நெடிய விவாதங்களுக்கு பின்னரே பிற்போக்கான கருத்தியல் தாக்குதல்களைக் கடந்து அரசியல் சாசனம் செயல்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் தலைமை நீதிபதி தர்மாதிகாரி கருத்து சமூகத்தை பின்னோக்கி இழுக்க முனைவதாக உள்ளது. ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் வாசலில் சட்ட விரோதமாக நிறுவப்பட்ட மனுவின் சிலை அகற்றப்பட வேண்டுமென்று பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருவதும் தலைமை நீதிபதி அறியாததல்ல.</p><p>சட்ட மாணவர்கள் தங்களின் பண்பாடு, சிந்தனை வேர்களில் இணைக்கப்பட வேண்டுமென்பதன் பொருள் என்ன? மனுஸ்மிருதி வலியுறுத்துகிற வர்ணாஸ்ரம கருத்தியல், பெண்ணடிமைத்தனம் போன்ற பிற்போக்கான கருத்தியலுடன் இணைக்கப்படுவதா? சமூக நீதி, இட ஒதுக்கீடு சார்ந்த சீர்திருத்தங்கள், சமூக முன்னேற்றத்தை பின்னோக்கி இழுப்பதா?</p><p>ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி அவர்கள் அரசியல் சாசன விழுமியங்களுக்கு புறம்பான தனது ஆலோசனையை திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்."</p><p><br></p>
