காதலித்ததால் இளம்பெண் படுகொலை ஆணவக் கொலை என விசாரணை நடத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்!
11 Jun 2026, 9:41 pm
<p><strong>காதலித்ததால் இளம்பெண் படுகொலை ஆணவக் கொலை என விசாரணை நடத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்!</strong></p><p>கயத்தாறு, ஜூன் 11- தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சமூக வலைத்தளம் மூலம் காதலித்து வந்த 18 வயது இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, ஆணவக் கொலை எனக் கருதி காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. தெற்கு மயிலோடை கிராமத்தைச் சேர்ந்த அபி செல்வி (18) கடந்த ஜூன் 9 அன்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் எலும்பு முறிவுகள் மற்றும் காயங்கள் இருந்தது அம்பலமானது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், நாமக்கல் இளைஞருடனான அவரது காதல் குடும்பத்தினருக்குத் தெரிந்ததால் வீட்டில் மோதல் வெடித்ததும், அதில் அபி செல்வி கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த பின் தற்கொலையாகச் சித்தரிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அவரது தாய் எஸ்தர் பாலின், அண்ணன் சிவஞானம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சங்கரலிங்கம் என்பவரைக் கயத்தாறு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இக்கொடூரச் சம்பவம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் கலையரசன், மாவட்டச் செயலாளர் கே.காசி ஆகியோர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், ஒரு பெண் தனது விருப்பப்படி காதலித்ததை ஏற்க மறுத்து, உடன்பிறந்த சகோதரனே உயிரைப் பறித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். தென்மாவட்டங்களில் மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ள இத்தகைய கௌரவக் கொலைகளைத் தடுக்க, தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
