தமிழ் எனக் கூறி ஒன்றிய அரசு மக்களை ஏமாற்றுகிறது
5 Mar 2026, 3:59 pm
<p><strong>தமிழ் எனக் கூறி ஒன்றிய அரசு மக்களை ஏமாற்றுகிறது</strong></p>
<p>துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்! </p>
<p> தஞ்சாவூர், மார்ச் 5 - “ஒன்றிய அரசு தற்போது தமிழ், தமிழ் எனக் கூறி மக்களை ஏமாற்றும் வேலையைச் செய்து வருகிறது. ரூ. 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருத திணிப்பிற்கு இடமில்லை” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் ச. இராமநாதன் சிலைகளைத் திறந்து வைத்து அவர் பேசுகையில், “புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணிக்க ஒன்றிய அரசு முயல்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ. 3,500 கோடி கல்வி நிதியை முடக்கி வைத்துள்ளது. ஆனால், நிதி கொடுத்தால் கொள்கையை மாற்றிக்கொள்ளும் அரசு இதுவல்ல என முதல்வர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்காக ரூ. 2,500 கோடி ஒதுக்கிய ஒன்றிய அரசு, தமிழுக்காக வெறும் ரூ. 147 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தமிழறிஞர்களுக்கு விருதுகள், எழுத்தாளர்களுக்கு வீடுகள் எனத் தமிழக அரசு தமிழுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழுக்காக உண்மையாக உழைப்பவர்கள் யார், நடிப்பவர்கள் யார் என்பதை மக்கள் உணர வேண்டும்” எனத் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ச. முரசொலி, ஆர். வைத்திலிங்கம், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.</p>
<p> </p>
