மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில 5ஆவது மாநாடு திருச்சியில் எழுச்சியுடன் துவங்கியது!
19 Dec 2025, 5:32 pm
<p><strong>மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில 5ஆவது மாநாடு திருச்சியில் எழுச்சியுடன் துவங்கியது!</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, டிச. 19 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தமிழ்நாடு மாநில 5-ஆவது மாநாடு திருச்சியில், டிசம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டின் துவக்கமாக, வெள்ளிக்கிழமையன்று மாலை பிரம்மாண்டப் பேரணியும், அதன் நிறைவாக கலை நிகழ்ச்சி, திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. பேரணியை ஈ.வி.ஆர். கல்லூரி அருகில் இருந்து, தேசிய ஊனமுற்றோர் உரிமைகளுக்கான மேடையின் (என்பிஆர்டி) செயல் தலைவர் எஸ். நம்புராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் தோ. வில்சன் தலைமை வகித்தார். வரவேற்புக்குழு செயலாளர் எஸ். ஸ்ரீதர் வரவேற்புரை ஆற்றினார். மாநிலப் பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி, மாநில செயலாளர் எஸ். பகத்சிங், நிர்வாகிகள் த. சாவித்திரி, ரஜினிகாந்த், எம். ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், என்பிஆர்டி பொதுச் செயலாளர் வி. முரளிதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். என்பிஆர்டி செயல் தலைவர் எஸ். நம்புராஜன், சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி, மாநில துணைத்தலைவர் வி. ராதாகிருஷ்ணன், மாநிலத் துணைச் செயலாளர் ஜி. தமிழ்செல்வி, மாநிலக் குழு உறுப்பினர்கள் எம். இளங்கோவன், எஸ்.ராணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில துணைத்தலைவர் ப.சு. பாரதிஅண்ணா அறிமுக உரை ஆற்றினார். ‘கூண்டில் ஏற்றப்படாத குற்றவாளிகள்’ நூல் ஆசிரியர் முனைவர் மு. முருகேசன், ‘கால்களின் கேள்விகள்’ நூலாசிரியர் அபிலாஷ் சந்திரன், ‘சகாக்கள் நிகரானவர்கள்; ஆனால், வேறானவர்கள்’ நூலாசிரியர் நிர்மல், ‘கண் உடல்தானம் இயக்க கண்ணொளி’ செல்வராஜ் மற்றும் விளையாட்டு துறையில் தேசிய சர்வதேச அளவில் சாதனை புரிந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் ஆகியோரை மாநிலச் செயலாளர் ராஜேஷ் பாராட்டி கவுரவித்தார். திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சண்முகம் நன்றி கூறினார். சனிக்கிழமையன்று (டிச. 20) காலை சமயபுரம் எம்ரால்டு திருமண மண்டபத்தில் ஸ்டேன் சுவாமி நினைவு அரங்கத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.</p>
