தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை தஞ்சை மாவட்ட தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தல்
7 May 2026, 12:20 am
<p><strong>தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை தஞ்சை மாவட்ட தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தல்</strong></p><p>தஞ்சாவூர், மே 6- தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதார பயிரான தென்னை சாகுபடியில், தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. </p><p> குறிப்பாக தஞ்சை மாவட்டம், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சுமார் 15,500 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்து பேராவூரணி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் வள்ளியம்மாள் விளக்கமளித்துள்ளார். </p><p>பாதிப்பின் அறிகுறிகள் 2016 ஆம் ஆண்டு பொள்ளாச்சி பகுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த ஈக்கள், தற்போது அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளன. </p><p>இவை தென்னை மட்டுமின்றி மா, கொய்யா, பப்பாளி, சம்பங்கி போன்ற பயிர்களையும் தாக்கும் தன்மை கொண்டவை. </p><p>இலைகளின் அடிப்பகுதியில் மெழுகு போன்ற பூச்சுடன் கூடிய அரைவட்ட வடிவ மஞ்சள் நிற முட்டைகள் காணப்படும்.</p><p> இளம்குஞ்சுகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் மரத்தின் வீரியம் குறைகிறது. ஈக்கள் வெளியேற்றும் தேன் போன்ற ஒட்டும் திரவத்தால் இலைகளின் மேல் கரும்பூஞ்சாணம் படர்கிறது. </p><p>இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் குறைய வாய்ப்புள்ளது.</p><p> வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். </p><p>மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள்: ஏக்கருக்கு 20 என்ற எண்ணிக்கையில், 3 அடி நீளம் மற்றும் 1.5 அடி அகலம் கொண்ட மஞ்சள் நிற அட்டைகளில் ஒட்டும் பசையைத் தடவி, மரங்களுக்கு இடையிலோ அல்லது மரத்தைச் சுற்றியோ 5-6 அடி உயரத்தில் கட்ட வேண்டும். தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் தண்ணீரை விசைத் தெளிப்பான் மூலம் பீய்ச்சி அடிப்பதன் மூலம் பூச்சிகளின் பெருக்கத்தைக் குறைக்கலாம். </p><p>ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட பச்சைக் கண்ணாடி இறக்கை பூச்சிகளை (கிரைஸோபெர்லா) ஏக்கருக்கு 400 என்ற எண்ணிக்கையில் தென்னந்தோப்புகளில் விடுவதன் மூலம் இயற்கை முறையில் ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். </p><p>‘ஐசாரியா ஃபியுமோசோரோசியா’ எனும் இயற்கை பூஞ்சாணக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மி.லி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கலாம். </p><p>விவசாயிகள் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.</p><p> இதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகள் பாதுகாக்கப்பட்டு, வெள்ளை ஈக்களின் பரவல் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.</p>
