வந்தே மாதரம்' கட்டாயச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுக: சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம்!
12 Jul 2026, 4:43 pm
<p>அரசு நிகழ்வுகளில் 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயமாக்கும் ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கை, இந்திய அரசியல் சாசனம் வழங்கும் மத சுதந்திரத்திற்கும் நாட்டின் பன்முகத்தன்மைக்கும் எதிரானது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இந்திய நாட்டைப் பத்துக் கரங்களைக் கொண்ட துர்கையாக, தாமரை மலரில் உறையும் லட்சுமியாக, அறிவைத் தரும் சரஸ்வதியாக உருவகித்து எழுதப்பட்ட 'வந்தே மாதரம்' பாடலை அனைத்து அரசு நிகழ்வுகளிலும் வரி நீங்காமல் அனைவரும் 3 நிமிடம் 10 வினாடிகள் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.</p><p>இது இந்து ராஷ்டிர அரசியலின் அதிகாரப்பூர்வ முன்னெடுப்பு.</p><p>பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம், ஒடிசா, வங்காளம் ஆகிய தேசிய இனங்கள், விந்திய, இமய மலைகள், யமுனை, கங்கை நதிகளென இந்தியாவின் பன்முக அடையாளத்தைப் புகழுக்குரிய வாக்கியமாக்கிய தேசிய கீதம் இரண்டாவதாக்கப்பட்டுள்ளது.</p><p>மாநில வணக்கம், மொழி வணக்கப் பாடல்கள் மூன்றாவதாக உள்ளன.</p><p>ஒற்றை இந்து மத அடையாளமே முதன்மையானது, இந்தியாவின் பன்முக அடையாளமும், மொழி அடையாளங்களும் அதன் பின்பே. பிற மத அடையாளங்களுக்கு எந்த இடமும் இல்லை என அறுதியிட்டுச் சொல்கிறது இந்த அறிவிப்பு.</p><p>இந்திய அரசியல் சாசனம் சொல்லும் மத சுதந்திரத்துக்கும், தனிமனித உரிமைக்கும், இந்திய பன்முகப் பாரம்பரியத்துக்கும் எதிரான இந்தச் சுற்றறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
