சோமாலியாவில் குழந்தைகளின் பசி நெருக்கடி தீவிரம்: யுனிசெஃப் எச்சரிக்கை
22 Aug 2026, 7:40 pm
<p>சர்வதேச உதவித் தொகைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவில் குழந்தைகள் மத்தியில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாடு தீவிரமடைந்து வருவதாக ஐ.நா.வின் யுனிசெஃப் எச்சரித்துள்ளது.</p><p>2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடல்நலச் சிக்கல்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை <strong>32 சதவீதம் அதிகரித்துள்ளது</strong>. இந்த ஆண்டு சுமார் <strong>19 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்</strong> எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p><p>சர்வதேச உதவித் தொகை வெட்டால், சோமாலியாவில் <strong>200-க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் ஊட்டச்சத்து மையங்கள் மூடப்பட்டுள்ளன</strong>. கடுமையான நிதி நெருக்கடி நீடித்தால், நாடு முழுவதும் மேலும் <strong>618 சுகாதார மையங்கள் மூடப்படும் அபாயம்</strong> இருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.</p><p>கடும் வறட்சியால் கால்நடைகள் உயிரிழந்து, பயிர்கள் அழிந்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் மட்டும் சுமார் <strong>5 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்</strong>. ஏற்கெனவே சுமார் <strong>33 லட்சம் சோமாலியர்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில்</strong>, நாட்டின் 1.9 கோடி மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p>இதற்கிடையில், சோமாலியாவின் சில பகுதிகளில் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிப்பதற்கான நிதி இந்த ஆண்டு <strong>80 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது</strong>.</p><p>இதனால், ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் <strong>10 லட்சம் குழந்தைகள், இளம்பெண்கள் மற்றும் பெண்கள்</strong>, அத்தியாவசிய ஊட்டச்சத்து சேவைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.</p>
