கருவில் குழந்தையின் பாலினம் கண்டறியும் ஸ்கேன் மையம்: இருவர் கைது
9 hours before
<p><strong>கருவில் குழந்தையின் பாலினம் கண்டறியும் ஸ்கேன் மையம்: இருவர் கைது</strong></p><p>சேலம், ஆக.8-சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து தெரிவித்த இருவரை தொளசம்பட்டி போலீசார் கைது செய்த நிலையில், தப்பியோடிய முக்கிய குற்றவாளி உள்பட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.சேலம் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் நந்தினி தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கு, தொளசம்பட்டி அருகே முத்துநாயக்கன்பட்டி கோணகரடு பகுதியில்சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறியும் ரகசிய ஸ்கேன் மையம் செயல்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.</p><p>இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக் குழுவினரும், ஓமலூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலரும் இணைந்து ரகசிய சோதனை நடத்த திட்டமிட்டனர். அதன்படி, இரு கர்ப்பிணிகளிடம் தலா ரூ.23 ஆயிரம் பணம் வழங்கி, தரகர் ஒருவர் மூலம் ஸ்கேன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மருத்துவக் குழுவினர் முத்துநாயக்கன்பட்டி கோணகரடு பகுதியில் உள்ள மேத்தா பிரதீப் தாஸ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஸ்கேன் இயந்திரம் மற்றும்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சோதனையின்போது அங்கிருந்த சிலர் அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்த 3 கர்ப்பிணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.</p><p>இதுதொடர்பாக டாக்டர் நந்தினி அளித்த புகாரின் பேரில், தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஜலகண்டாபுரம் காவல் ஆய்வாளர் உஷாராணி தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த மேத்தா பிரதீப் தாஸ் (29), ரவிக்குமார் (37) ஆகிய இருவரை வெள்ளியன்று கைது செய்தனர்.</p><p>மேலும், தப்பியோடிய சுகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளான ராதிகா, வடிவேல், கனகவள்ளி, மணி ஆகிய 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>
