இடையாத்தி - கருக்காக்குறிச்சி சாலையை சீரமைக்க கோரிக்கை
12 Dec 2025, 2:40 pm
<p><strong>இடையாத்தி - கருக்காக்குறிச்சி சாலையை சீரமைக்க கோரிக்கை</strong></p>
<p>தஞ்சாவூர், டிச.12- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள, இடையாத்தி கிராமத்தில் இருந்து, கருக்காக்குறிச்சி வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடையாத்தி கிராமத்தில் இருந்து ஈச்சன்விடுதி கல்லணைக் கால்வாய் வாய்க்கால் வழியாக, புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சி கிராமம் வரை 9 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலையின் இருபுறமும் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. மேலும் வாய்க்கால் சாலையில் இருபுறமும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு வேலைக்குச் சென்று வர இச்சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இடையாத்தி கிராமத்தில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சி கிராமம் வரை குண்டுங்குழியுமாக உள்ளது. கப்பிகள் பெயர்ந்து சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், சாலையின் இருபுறமும் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாதபடி ஒற்றையடிப் பாதையாக மாறி விட்டது. இதன் காரணமாக இந்த பகுதியில் மாட்டுவண்டிகள், கதிர் அறுக்கும் இயந்திரங்கள், டிராக்டர்கள் ஆகியவை செல்ல முடியாத சூழல் உள்ளது. இந்தச் சாலையை சீரமைத்துத் தந்தால், பொதுமக்கள் செல்லவும் வசதியாக அமையும். மேலும், விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்ல வசதியாகவும் இருக்கும். இதனால், பொதுமக்கள், விவசாயிகள் பயனடைவர். எனவே, இடையாத்தி கிராமத்தில் இருந்து, ஈச்சன்விடுதி கல்லணை கால்வாய் வாய்க்கால் செல்லும் வழியாக, புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சி கிராமம் வரை உள்ள சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
