திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து கட்சி, அதிகாரிகளை கொண்ட கூட்டத்தை நடத்தி தீர்வு காண கோரிக்கை
27 Dec 2025, 4:49 pm
<p><strong>திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து கட்சி, அதிகாரிகளை கொண்ட கூட்டத்தை நடத்தி தீர்வு காண கோரிக்கை</strong></p>
<p>திருச்சி டிச.27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிசெல்வன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் மத்தியப் பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளது. பல மாவட்டங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. நாள்தோறும் ஏராளமான மாவட்டங்களை சார்ந்த பயணிகள் மற்ற மாவட்டங்களுக்கு செல்ல திருச்சி மாவட்டத்திலிருந்து செல்லும் சூழல் உள்ளது, திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கமும், வாகன பெருக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால், திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி அண்ணா சிலை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு புதிதாக தேசிய நெடுஞ்சாலைகளிலும் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் மக்களை இறக்கி விடுவதற்காக சஞ்சீவி நகர் சந்திப்பு, பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நெரிசல் ஏற்படுகிறது. பால்பண்ணை முதல் திருச்சி மாநகர் வரையிலும், பாலக்கரை, பிஷப் ஹூபர் வயலூர் சாலை உள்ளிட்ட சந்திப்புகளிலும் நெரிசல் காரணமாக வாகன பயண நேரம் அதிகரிப்பதோடு, அதிகமான விபத்துகளினாலும் மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகியுள்ளன. மேற்கண்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு, ரயில்வே துறையின் சார்பாக நடைபெற்று வரும் மாரிஸ் மேம்பாலம், திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் செல்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, கட்டுமான பணியை விரைவுபடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திலின் வெளிப்புற சாலைகளில் இருந்து இயக்கப்படும் பிற மாவட்ட பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கினால் சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்க உடனடியாக செயல்படுத்த வேண்டிய பணிகளை விரைவுபடுத்த நிர்வாக ரீதியான அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தினமும் நடைபெறும் விபத்துகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், போக்குவரத்து காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திட வேண்டும். மேலும் நீண்ட கால திட்டங்களான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்திட ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் நிதி ஒதுக்கீட்டைப் பெற மேற்கண்ட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார். </p>
