திருச்சி – தாம்பரம் சிறப்பு கட்டண ரயிலை நிரந்தர ரயிலாக அறிவிக்கக் கோரிக்கை
17 Dec 2025, 4:11 pm
<p><strong>திருச்சி – தாம்பரம் சிறப்பு கட்டண ரயிலை நிரந்தர ரயிலாக அறிவிக்கக் கோரிக்கை</strong></p>
<p>சிதம்பரம், டிச.17- தாம்பரம் – திருச்சி – தாம்பரம் இடையேயான ரயிலை வாரத்தின் அனைத்து நாட்களும் இயங்கும் வகையில் நிரந்தர ரயிலாக அறிவிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு வண்டி எண்: 06190 கொண்ட சிறப்பு கட்டண ரயில், கடந்த ஏப்ரல் 4-ம் தேதி முதல் மெயின் லைன் எனப்படும் மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பகல் நேர ரயிலாக உள்ளதால், அனைத்துப் பெட்டிகளும் அமரும் வசதி கொண்டவையாக உள்ளன. இது காலை 5.35 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு, நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருச்சியை வந்தடைகிறது. இந்த ரயில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் தவிர, வாரத்தில் 5 நாட்கள் இயங்குகிறது. இதன் மூலம் பண்ருட்டி, கடலூர், சிதம்பரம் பகுதி மக்களும், வணிகர்களும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். குறைந்த நேரத்தில் சென்னை சென்று திரும்ப முடிவதால், இந்த ரயிலுக்கு வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த ரயில் வரும் ஜனவரி மாதம் வரை மட்டுமே இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது கடலூர் மாவட்ட வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த ரயிலைத் தொடர்ந்து நிரந்தர ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, சிதம்பரம் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் அப்துல் ரியாஸ், சிவராம வீரப்பன் உள்ளிட்டோர், தாம்பரம் – திருச்சி ரயிலை வாரத்தின் ஏழு நாட்களும் இயக்க வேண்டும், கோயம்புத்தூர் – மயிலாடுதுறை ஜன்சதாப்தி (12083-84) ரயிலைச் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் மற்றும் காரைக்கால் – எழும்பூர் கம்பன் விரைவு ரயிலைச் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.</p>
