அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது! 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் தீர்ப்பு
3 Jun 2026, 9:02 pm
<p><strong>அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது! 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் தீர்ப்பு</strong></p><p>சென்னை, ஜூன் 3 - 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இ.எஸ். இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. </p><p>இதை எதிர்த்து திமுக வேட்பாளர் மு. அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். </p><p>அஞ்சல் வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை என்றும் பல அஞ்சல் வாக்குகள் தன்னிச்சையாக நிராகரிக்கப்பட்டன என்றும் அவர் வாதிட்டார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது. </p><p>அதன்படி 2019-இல் வாக்குகள் எண்ணப் பட்டாலும் உச்சநீதிமன்றத் தடை காரணமாக முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தன. </p><p> இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் களம் இறங்கிய மு. அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையை தோற்கடித்தார். மேலும் சட்டப்பேரவை தலைவராகவும் ஐந்தாண்டு காலம் பணியாற்றி முடித்தார். </p><p>இந்நிலையில் தான், 2016 தேர்தலையொட்டி மு. அப்பாவு தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் புதன்கிழமையன்று இறுதித் தீர்ப்பு வழங்கினார். </p><p>அதில், மறுவாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக வேட்பாளர் மு. அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தார். </p><p>மேலும், இன்பதுரையின் வெற்றி செல்லாது என்று அறிவித்த நீதிமன்றம், அந்த 5 ஆண்டுகளுக்கான எம்எல்ஏ ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவொரு சலுகையையும் அவர் கோர முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.</p>
