வெளிப்படைத்தன்மை தேர்வில் தனியார் பள்ளிகள் தோல்வி! கட்டண விவரங்கள் திட்டமிட்டு மறைப்பு: அரசு என்ன செய்யப்போகிறது
7 Jun 2026, 1:27 am
<p><strong>வெளிப்படைத்தன்மை தேர்வில் தனியார் பள்ளிகள் தோல்வி! கட்டண விவரங்கள் திட்டமிட்டு மறைப்பு: அரசு என்ன செய்யப்போகிறது</strong></p><p>சென்னை, ஜூன் 6- அங்கீகரிக்கப்பட்ட கல்விக் கட்டண விவரங்களை ஜூன் 5-ஆம் தேதிக்குள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவைத் தமிழகம் முழுவதும் உள்ள பல தனியார் நிறுவனங்கள் பின்பற்றவில்லை என்பது செய்தியாளர்களின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. </p><p>பள்ளிக் கல்வித்துறை தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்த போதிலும், மாநிலம் முழுவதும் உள்ள பல தனியார் பள்ளிகள் தங்களின் அங்கீ கரிக்கப்பட்ட கட்டண விவ ரங்களைப் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்து வதற்கான ஜூன் 5 என்ற காலக்கெடுவைப் பின்பற்றத் தவறியுள்ளன என்று ஊடகங்கள் நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.</p><p> சென்னையில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில், ஒரே ஒரு பள்ளி மட்டுமே தனது கட்டண விவரங்களைக் காட்சிப்படுத்தி யிருந்தது; மற்றொரு பள்ளி அந்தத் தகவல் தங்கள் இணையதளத்தில் இருப்பதாகக் கூறியது. இதே போன்ற விதிமீறல்கள் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பதிவாகி யுள்ளன.</p><p> 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மாணவர் சேர்க்கையை ஈர்ப்பதற்காக, தேர்ச்சியடைந்த தங்களின் சாதனையாளர்களின் பேனர்களை பள்ளிகள் முக்கிய இடங்களில் பெருமையுடன் வைத்துள்ள நிலையில்தான் இந்த விதிமீறல் நடந்துள்ளது. வட சென்னையில் உள்ள இரண்டு பள்ளிகளின் ஊழியர்கள், தங்களுக்கு அரசின் இந்த உத்தரவு குறித்துத் தெரியாது என்று கூறினர். </p><p>தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஊழியர், கட்டண விவரங்கள் இன்னும் காட்சிப் படுத்தப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். செய்தியாளர் கட்டண விவரங்களைக் கேட்ட போது, ஒரு ஊழியர் அதை வாசித்துக் காட்டினாரே தவிர, முழுமையான பட்டியலைக் காண்பிக்க மறுத்துவிட்டார். </p><p>ஒருமாணவனின் தாயார் கூறுகையில், இந்த வெளிப்படைத்தன்மை இல்லாத தால், பள்ளிகளை அணுகுவதற்கு முன்பு கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது குடும்பங்களுக்குக் கடினமாக உள்ளது என்றார். “நான் திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குறைந்தது மூன்று தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்குச் சென்றேன், ஆனால் அரசு உத்தரவிட்டபடி எந்தவொரு பள்ளியும் கட்டண விவரங்களைக் காட்சிப்படுத்தவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.</p><p> திருச்சியில் பல பள்ளிகள் காலாவதியான கட்டண விவரங்களைக் காட்சிப்படுத்தி யிருப்பதையோ அல்லது தங்களின் இணையதளங்களில் தகவல்களைப் பதிவேற்றத் தவறி யிருப்பதையோ கண்டறிந்தனர். பள்ளி நிர்வாகத்துடன் கலந்தா லோசித்த பிறகு விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப் படும் என்று பள்ளித் தரப்பில் அதிகாரிகளிடம் தெரிவிக்கப் பட்டது. </p><p>இந்த உத்தரவைப் பின்பற்றாத பள்ளிகள் உடனடி யாகச் செயல்பட அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், இறுதி இணக்க அறிக்கை ஜூன் 10-க்குள் உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப் படும் என்றும் அதிகாரிகள் தெரி வித்தனர். மதுரையிலும் நிலைமை இதிலிருந்து வேறுபடவில்லை. கோயம்புத்தூரில் நான்கு தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகளைப் பார்வையிட்டபோது, எந்தவொரு பள்ளியும் தங்களின் கட்டண விவரங்களைப் பொதுவெளியில் காட்சிப்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. </p><p>கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர் கூறுகையில், பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு 1-ஆம் வகுப்பிற்கு ரூ.11,790 என கட்டணம் நிர்ணயித்துள்ள நிலையில், ஒரு தனியார் பள்ளி ரூ.21,000 கல்விச் கட்டணமாக வசூலித்துள்ளதாகக் குறிப்பிட்டார். </p><p>கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி உள்ளிட்ட அதிகாரிகள் கூறுகையில், பள்ளிகள் இந்த உத்தரவைப் பின்பற்றி, அதற்கான புகைப்பட ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர். “இதுவரை, பள்ளிகளிடமிருந்து அத்தகைய புகைப்படங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை” என்று மதுரையின் மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கோரிய கட்டண விவ ரங்களை வழங்குவதில் கல்வி அதிகாரிகள் இரண்டு ஆண்டு களுக்கும் மேலாகத் தாமதம் செய்ததை அடுத்து, மாநில தகவல் ஆணையம் அண்மையில் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.</p><p> அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களின் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரங்களைப் பள்ளி வளாகத்தில் முக்கியமாகத் தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டும், அதைத் தங்களின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் மற்றும் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களில் வகுப்பு வாரியான கட்டண விவரங்களை உள்ளடக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறைக்கு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. </p><p>சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பல தனியார் பள்ளிகள் ஒன்றாம் வகுப்புக்கு ரூ.95 ஆயிரம் வசூலிக்கின்றன. 2 ஆம் வகுப்புக்கு ரூ98 ஆயிரம் வசூலிக்கின்றன. இதில் சீருடை, நோட்டு புத்தக கட்டணம் தனி யாக தரவேண்டுமாம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கல்விக் கட்ட ணம் தொடர்பாக உத்தரவு கள் கண்டிப்பாக நடைமுறைப் படுத்தப்படும் என்று உறுதி யளித்திருந்தார்.எனவே அவர் நேரடியாக தனியார் பள்ளி களுக்கு சென்று பெற்றோர்களி டம் விசாரித்தால் உண்மை வெளியாகும். ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்று அவல நிலைக்கு புதிய அரசு ஆளாகப் போகிறதா? என்று பெற்றோர்கள் கேட்கின்றனர்.</p><p>எனவே அரசு உட</p><p>னடியாக இந்த விவகாரத்தில் தலை யிட்டு கட்டணத்தை முறைப் படுத்துவதோடு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாக வசூ லித்த பணத்தை பெற்றோரிடம் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.</p>
