எழுத்தாளர் பூமணி மறைவுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அஞ்சலி!
13 Jul 2026, 5:41 pm
<p>எழுத்தாளர் பூமணி மறைவுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அஞ்சலி செலுத்தியுள்ளது.</p><p>இதுகுறித்து ததீஒமு வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது;</p><p>உழைக்கும் மக்களின் வாழ்வியலை படைப்பாக்கிய எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அஞ்சலி செலுத்துகிறது.</p><p>தமிழ் இலக்கிய உலகின் மிகவும் குறிப்பிடத்தக்க சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி இயற்கையடைந்தார். சிறுகதைகள், நாவல்கள் வரலாற்று நூல்கள் என பல்வேறு படைப்புகளை தமிழ் சமூகத்திற்கு வழங்கியவர்.</p><p>பூமணியின் " பிறகு" நாவல் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை, மற்றும் சாதிய ஒடுக்குமுறை, வறுமை, சமூக உறவுகள் ஆகியவற்றைப் படம்பிடித்து காட்டுகிறது என்றால் அவரது "வெக்கை" சாதிய அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பையும், எதிர்வினையையும் பேசுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் அசுரன் திரைப்படம் உருவாக்கப்பட்டது.</p><p>இவரது படைப்புகள் விவசாயம், நிலம், உழைப்பு, கிராமப்புற மக்களின் வாழ்க்கை, வறுமை , ஆகியவற்றை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டவை ஆகும். </p><p>பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் செய்து அவர் எழுதிய பிரம்மாண்ட வரலாற்று நாவல் அஞ்ஞாடி ஆகும். பல்வேறு சமூகங்களின் வரலாற்று நூலாக உள்ள அஞ்ஞாடிக்கு 2014 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.</p><p>அவரது வயிறுகள், நொறுக்குகள், நல்ல நாள் ஆகிய சிறுகதைகளும் தலித் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, உழைப்பை ,சாதிய ஒடுக்குமுறையை முக்கிய கருப்பொருளாக உருவாக்கப்பட்ட சிறுகதை தொகுப்புகள் ஆகும்.</p><p>உழைக்கும் மக்களின் பாடுகளைப் பேசிய எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது இதயபூர்வமான அஞ்சலியை உரியதாக்குகிறது என்று மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்</p><p><br></p>
